
– ஜெயஸ்ரீ எம். சாரி
மஹாராஷ்டிர மாநிலத்தில் புல்டானா மாவட்டத்தில் ஷேகாவ் என்னும் இடத்தில் நம் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் துறவிகளுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவ்வாறான துறவிகளில் ஒருவர் தான் ஸ்ரீ சந்த் கஜானன் மஹாராஜ். அவருடைய கோயிலானது ஷேகாவ் என்னும் புனித நகரில் உள்ளது.
ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் தரிசிக்கும் இடமாக இக்கோயில் இருப்பினும் சுத்தத்திற்கும், பக்தர்களின் ஒழுக்கத்திற்கும் சான்றாக இந்தக் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ‘ஆனந்த் சாகர்’ என்னும் ஆன்மீக மற்றும் புத்துணர்வு தரும் மையத்தை ஸ்ரீ கஜானன் மஹாராஜ் மந்திர் ட்ரஸ்ட் நடத்தி வருகிறது.
ஆனந்த் சாகரில் ஆன்மீக மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துறவிகளின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
நம் தமிழ்நாட்டில் இருந்து தெய்வப் புலவர் திருவள்ளுவர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோர்களின் சிலைகளை இந்த டிரஸ்ட்டினர் வைத்துள்ளனர். உட்கார்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள சிலையில் திருவள்ளுவரின் வலது கையில் எழுதுகோலும், இடது கையில் ஏடும் வைத்திருப்பதைப் போல பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
‘மனைவியே இல்லத்தின் திருமகள். எந்த இல்லத்தில் திருமகள் மகிழ்ச்சியாக இருக்கிறாளோ அந்த இல்லத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்’ என்று திருவள்ளுவரின் சிலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை மையமாக வைத்து மேற்கூரிய வரிகளை திருவள்ளுவரின் சிலையில் பொறித்துள்ளார்கள் என்று தோன்றுகிறது.
ஸ்ரீ சந்த் கஜானன் மஹாராஜ் கோயிலில் ஒவ்வொரு விசேஷ தினத்திற்கும் லட்சணக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் ஒரு முறை கூட கூட்ட நெருக்கடியால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இக்கோயிலில் பதிவானது கிடையாது என்பதே ஒரு வரலாறு தான். சீரான பராமரிப்பு, சிறப்பான திட்டமிடல் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்கும் சுய ஒழுக்கம் ஆகியவையின் பலனாகவே இது சாத்தியமாகிறது. பக்தர்களின் கூட்டத்தினை மேலாண்மை செய்வதில் இந்தக் கோயில் நம் நாட்டிற்கே ஒரு முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது.
போட்டோ: தீபக் சுரோசே, ஷேகாவ்.




