-டி.எஸ். வேங்கடேசன் –
மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அதிமுக அமைச்சரும், பாஜக செயல் குழு உறுப்பினருமான டாக்டர் ஹெச் வி ஹாண்டே , அரசியல் அமைப்பு சட்ட விதி “ 370ன் தோற்றமும் வீழ்ச்சியும் “ குறித்த புத்தகம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தை அவர் ஜனசங்க கட்சியை தோற்றவிற்ற சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் கேரள ஆளுநரும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பி சதாசிவம் நூலுக்கு முகவுரை எழுதியிருக்கிறார்.
அதில் “ ஆசிரியர் மிக சரியாக சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நூலை அர்ப்பணித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சபையில் எப்படி ஆர்ட்டிகிள் 370 கொண்டு வரப்பட்டது, இது வருவதற்கு முன்பு காஷ்மீரின் நிலை, இந்த சட்ட விதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் நீக்கிய பின் உள்ள நிலைமை தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1950 முதல 2019 வரையிலான வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் நூலை எழுதிய ஆசிரியர் பாராட்டுதலுக்குரியவர்” என கூறியுள்ளார்.
கடின அட்டையில், வழுவழுப்பான ஆர்ட் காகிதத்தில் புத்தகம் அமைந்துள்ளது. ஒன்று முதல் 6 அத்தியாயங்களில் எப்படி ஆர்டிகிள் 370 கொண்டு வரப்பட்டது, திரைமறைவு வேலைகள் குறித்து தக்க ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 7ம் அத்தியாயத்தில் சியாமா பிரசாத் முகர்ஜிக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று பட்ட இந்தியாவுக்காக பாடுப்பட்ட அவர் கட்டுப்பாடற்ற அதிகாரம் கொண்ட 370 கடுமையாக எதிர்த்தார். அவரது மறைவு மர்மமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் காஷ்மீர், முதல்வர் ஷேக் அப்துல்லா, லார்டு மவுண்ட் பாட்டன் , தமிழகத்தின் என் கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரின் தீவிர முனைப்பு மற்றும் சதி விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது. சர்தார் படேல் கடைசி வரை 370 இடம்பெறுவதை தடுத்த எடுத்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது.
“ இரு முக்கிய விஷயங்கள் இதுவரை பிரஸ்தாப்பிக்கப் படவில்லை. மற்ற ஆர்டிகிள்களை அறிமுகப்படுத்த அண்ணல் அம்பேத்கர் ஏன் 370 ஐ தாக்கல் செய்யவில்லை? முதல்வர் ஷேக் அப்துல்லா ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஏன் சிறையில் 11 ஆண்டுகள் அடைக்கப்பட்டார்? இவ்விரண்டுக்கும் பதில் இதுவரை இல்லை. பரூக், உமர் மற்றும் மெகபூபா ஆகியோரின்
வீட்டுக் காவலை பத்திப் பத்தியாக எழுதிய ஊடகங்கள் இதை ஏன் எழுப்பவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.
காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்த போது அதில் உள்ளுர் வீரர்கள் சேர்ந்து கொண்டனர். நிலைமை கட்டுமீறிய போதும் பிரதமருக்கு உண்மை நிலையை பி எம் கெளல் தெரிவிக்கவில்லை. குருஜி கோல்வார்க்கரை அரசு பிரதிநிதியாக படேல் அனுப்பி குழப்பத்தில் இருந்த மகாராஜாவுடன் பேசவைத்தார். நேரில் சென்ற படேல் ராணுவ அதிகாரியின் வேண்டுகோளை ஏற்று கூடுதல் படைகளை அநுப்பி காப்பாற்றினார். பிரதமரின் உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையை அவர் அதிரடியாக எடுத்தார்.
நேரு 7 நாட்கள் எந்த முடிவும் எடுக்காமல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீர பகுதிகளை ஆக்ரிமிக்க வழி வகுத்தார் என நூலாசிரியர் கூறுகிறார். ஷேக் அப்துல்லா காஷ்மீரை அனைத்து அதிகாரங்களும் கொண்ட தனி முஸ்லீம் நாடாக மாற்ற முயற்சித்துள்ளார்.
“ அப்துல்லா நீங்கள் பிரதமருக்கு தவறான அறிவுரை கூறி வருகிறீர்கள். உங்களுக்கு இந்தியாவின் நிதி, உணவு தானியங்கள் உள்ளிட்ட அநைத்தும் வேண்டும். எல்லைகளை இந்திய படைகள் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்தியாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதனால் அங்கு தொழில்துறை வளர்ச்சி இருக்காது, வேலைவாய்ப்புகள் இருக்காது. இதற்கு நான் உடன்பட மாட்டேன்” என அம்பேத்கர் கூறியதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று வெள்ளையே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட ஹண்டே, திமுக, காங்கிரஸ், சுதந்திர கட்சியின் தலைவர்களை தோற்கடித்து மேலவை உறுப்பினராக 1964ல் தேர்வானார். பின்னர் மூதறிஞர் ராஜாஜியின் அழைப்பை ஏற்று சுதந்திர கட்சியில் சேர்ந்து ராஜாஜியின் மறைவு வரை அதில் நீடித்தார்.
முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக திறம்பட பணியாற்றினார். இப்போது பாஜவின் செயற்குழு உறுப்பினராக நீடித்துள்ளார். 1950ல் மருத்துவ பணியை தொடங்கிய இவர் ஏழைகளுக்கு சேவை ஆற்றி வருகிறார். 94 வயதான அவர் 5 நூல்களை எழுதியுள்ளார். தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்றவர்.
நூறு பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தின் விலை 250. இந்த புத்தகம் , ஹண்டே மருத்துவமனை, 44 லட்சுமிதி டாக்சிஸ் சாலை,சென்னை 600 030 என்ற முகவரியில் கிடைக்கும். செல் . 98408 34862\ 98408 34865 ஆகிய எண்களில் தொடர்பு கொண்ட தகவல் அறியலாம்.