பகுதி 1
நடுஇரவு யுத்தகள மங்கை
சற்று மனவேதனையுடன்தான் ஜெய்ப்பூர் வந்தேன். ஜெய்ப்பூர் வரும்வழியில் இருந்த மலைத்தொடரையும் அதன் மேலிருந்த கோட்டைகளையும், கொத்தளங்களையும் பார்த்தவுடன் மனச்சோர்வு அகன்றது. அருமையான சரித்திரக்கதை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் வந்தது. நான்குபுறம் மலைசூழ்ந்த குறிஞ்சி நிலம். நடுவில் அழகான நீர்நிலை. மனது மகிழ்ந்து புரவியின் வேகத்தில் ஓட ஆரம்பித்து, நானுற்றி நாற்பது வருடத்துக்கு முன்பு சென்று நின்று போனது.
இன்னும் விடியவில்லை. ஆரவல்லி மலைத்தொடர்களில் எப்பொழுதும் பிரகாசமாகத் தெரியும் சந்திரனும், நட்சித்திரங்களும் முந்தியநாள் நடந்த கடும் யுத்தத்தைக் கண்டு உள்ளம் அஞ்சி மெல்லிய மேகப் போர்வைக்குள் மறைந்து கொண்டது. விடிவெள்ளியும், தெற்கு மூலை சுவாமி நட்சித்திரமும் கூட அன்று தனது முகத்தை மூடிக்கொண்டது. காற்றுக்கு கூட அச்சமா என்ன? எப்பொழுதும் மெல்லிய பூங்காற்று வீசும் அந்த இடத்தை விட்டு வாயுபகவான் ஓடிப்போயிருந்தான். அந்தக் கொடுமையான இரவில் தனது மெல்லிய பாதங்கள் பூமிதேவியின் மேல் பட்டும், படாமல் ஒரு வாலிப வயதுப்பெண் ஒருத்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். எங்கும் இருள். அவள் கைகளில் வாள் ஒன்று இருந்தது. அவள் சென்ற இடத்தில் ஹல்டிகாடியின் புதர்கள் மண்டி கிடந்தது தெரிந்தது. அந்தப் புதர்செடிகள் நேற்று பகலில் அபூர்வமாக கிடைத்த மனித ரத்தத்தைக் குடித்தும் அவற்றின் தாகம் தீரவில்லை. அதை உணர்ந்த வருணபகவான் அவற்றின் தாகத்தை தீர்க்கலாமா என்று தனது படைகளான நீர் மேகத்தை அனுப்பினான். நீர் மேகத்திரளகள் தனது கைகளில் இருந்த மின்னல் வாட்களை எடுத்து சப்தத்துடன் தங்களுக்குள் தாக்க ஆரம்பித்தன. புதர்களின் நடுவே செல்ல சிறிய ஒற்றைப் பாதை தெரிந்தது. அந்தப்பாதையில் கவலையுடன் புதர்களை வாளால் விலக்கியபடி சென்றாள். அவள் கண்களில் நீர்வடிந்து கொண்டிருந்தது. ஆகா! அங்கு என்ன? அந்தக் கோரத்தை சொல்ல எனது மனது தயங்குகிறது. எனது எழுதுகோலில் இருக்கும் மையும் காய்ந்து போய்விட்டது. என்ன கோரம்! ஆயுதம் தரித்து அழகான இருந்த வாலிபர்கள் இறந்து கிடந்தார்கள். சில இடங்களில் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்தும் கிடந்தார்கள். விடாது இடித்த இடியின் நடுவில் வந்த மின்னலில் அந்த அழகுமங்கை யுத்தத்தில் இறந்து கிடந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். மனம்தளராது பார்த்துக்கொண்டு அவள் மனதில் வைராக்கியமும், உறுதியும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. ஆகா இதோ! என்று அவள் உதடு மெல்ல சொன்னது. தனது முயற்சியில் வெற்றி பெற்றத் திருப்தி ஆகாயத்தில் மின்னிய வெளிச்சத்தில் அந்த மங்கையின் முகத்தில் தெரிந்தது. யுத்தத்தில் வீழ்ந்தவர்களில் ஒருவனை எடுத்துக் கொண்டு, யுத்தபூமியை விட்டு மெல்ல நகன்றாள். நாமும் அவர்களைத் தொடர்வோம். யுத்தகளத்திலிருந்து அரைகாத தூரம் சென்ற பிறகு, அங்கு வட்டமாக இருந்த ஒரு சிறிய குடிசைக்குள் அவள் சென்றாள். அவள் குடிசைக்குள் சென்றதும் ஆகாயம் பொத்துக் கொண்டதோ என்று எண்ணும்படி மழைபொழிய ஆரம்பித்தது. எளிதாக கிடைக்கக் கூடிய புற்களையும் மற்ற பொருட்களையும் வைத்து கூரையை அமைத்திருந்தார்கள். ஆனால் உள்ளே மழை நீர் அதிகம் வரவில்லை. இது போன்ற இடியும், மழையும் ஆரவல்லி மலைத்தொடர்கள் இதுவரை பார்த்ததில்லை. உள்ளே சென்ற அவள், எப்பொழுது அணைவோமா என்று படபடத்துக்கொண்டிருந்த விளக்கை தூண்டினாள். அந்த குடிசையில் ஒரு வயதானவர் ஒருவர் அவளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்த முதியவரைப் பார்த்தால் வைத்தியர் போலத் தோன்றியது. அவனின் கைகளை தொட்டு நாடி பார்த்தார். “மீனா, சரியான நேரத்தில் கொண்டு வந்தாய். நாடி மெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு படுக்க வை. கொஞ்சம் சுடுதண்ணியும் வை” என்றார். மீனா என்று அழைக்கப்பட்ட அந்த தைரியமங்கை அவர் சொன்னபடி செய்தாள். கீழே படுக்கவைக்கப்பட்ட வாலிபன் வாயில் கஷாயத்தை ஊற்றினார். அதற்குள் சுடுநீர் தயாராக அவனது வேதனையைப் போக்க மருந்தினை அதனுடன் கலந்து அவன் வாயில் புகட்டினார். அவனை திரும்பிப் படுக்க வைத்தார். விக்கிரமனின் முதுகில் பட்டகாயத்தில் மருந்து பூச அவன் முனகினான். வைத்தியரின் வெண்தாடிக்குள் தெரிந்த முகம் சற்று மலர்ந்தது. “இனி பிழைக்க வைத்துவிடலாம். நாளை காலைதான் விழிப்பான். அவனைத் தாக்கிய வாளில் ஏதேனும் விஷம் கலந்து இருப்பார்களோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. வாளினால் தாக்கபட்ட இடத்தில் சதையை எடுத்து, கண்ணாடிக் குடுவையில் இருந்த திரவத்துடன் சேர்த்து ஒரு சிறிய குடுவையில் போட்டார். சற்று நேரத்தில் பொங்கியது விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. ஆகா! இது கொடிய நல்லபாம்பின் விஷம் அல்லவா? உடனே முறிக்க வேண்டுமே என்று எண்ணியவர், மருந்து குப்பியை எடுத்து அதிலிருந்த களிம்பை எடுத்து காயம்பட்ட இடத்தில் தடவினார். இனிக் கவலையில்லை என்ற நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனாள், “என்னவாகியது?” என்றாள். “நல்லபாம்பு விஷத்தை வாளில் தடவி அதைக்கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இவனின் நல்லநேரம் வாள் மிக ஆழமாக இறங்கவில்லை. வாளின் தாக்கம் நரம்பில் பட்டதால் விழுந்து விட்டான். காப்பாற்றி விடலாம்” என்றார். “இந்தக் களிம்பு, நல்லபாம்பு விஷத்தை முறியடிக்குமா?” என்ற மீனாள் அதை எடுத்தாள். “நீயே வைத்துக் கொள். பாம்புக்கடி கண்டு பன்னிரண்டு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது ராஜநாகத்தின் விஷத்தை முறிக்காது” “அதற்கு? “வேறு இருக்கிறது. ஆனால் கடித்தவுடன் இட வேண்டும்” “அது எங்கே?” “அங்கே வைத்திருக்கிறேன். அது வேண்டுமானால் எடுத்துக் கொள்” என்றார். “இவருக்கு எப்பொழுது குணமாகும்?” “நாளை காலை எழுந்துவிடுவான். ஆனால் இரண்டுநாள் அசதி இருக்கத்தான் செய்யும். நான் வரவா?” என்றபடி வெளியில் சென்றார். அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் மழையும் மின்னலும் குறையவில்லை. சற்றுநேரத்தில் அவர் மறைந்தார். குடிசையின் கதவைச் சாத்தினாள். அந்த வாலிபனை எடுத்து தனது மடியில் படுக்க வைத்தாள். பாதுகாப்பான இடத்துக்கு வந்த நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது. மறுநாள் காலை விழித்த அந்த வாலிபன் எங்கிருக்கிறேன்? என்று கேட்டான். மீனாளில் மடியில் படுத்து இருப்பது தெரிந்ததும், மீண்டும் தூங்கினான். மீனா என்று அழைக்கப்பட்ட இந்தக் கதையின் நாயகி, அவனை கவலையுடன் பார்த்தாள். அவள் மனது ஹல்டிகாடி யுத்தகளத்திலிருந்து இரண்டாயிரம் மைல்கள் தள்ளி இருக்கும் திருவாங்கூர் தலை நகரமான பத்மநாதபுரத்திற்கு சென்றது ஒரு வருடத்துக்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது என்று எண்ணினாள். இந்தக் கதையை ஆர்வமாக படிக்கும் எனது எஜமானர்களே, யார் அந்த தைரியமங்கை?, அவள் யாரை யுத்தகளத்திலிருந்து காப்பாற்றினாள்? எதற்கு காப்பாற்ற வேண்டும்? என்றெல்லாம் உங்களுக்கு தோன்றும். என்று உங்களுக்கு தோன்றும். அவசரம் வேண்டாம். பொறுமை, பொறுமை. சொல்கிறேன். தொடரும்


