கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெறுகிறது.
அந்த நூலில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தப்பா, அந்த நூலை தடை செய்வதுடன் வைரமுத்துவையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் , இந்த நூலில் கம்பராமாயணத்திற்கும் கம்பனின் வார்த்தைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி ராமாயணத்திலும், கம்ப ராமாயணத்திலும் சுக்ரீவனின் வேண்டுகோளுக்கிணங்க ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான் என்பது புராணம். இதில் என்னை ஏன் மறைந்திருந்து கொன்றாய் என்று வாலி ராமாயணத்தில் ராமரைக் கேட்டதுடன் சீதையை பிரிந்ததால் உன் மதிமயங்கி இச்செயலை செய்தாயோ என்று வாலி கேட்டதைக் குறிப்பிட்டு, ராமன் மதி மயங்கி, புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்த காரியம் என வைரமுத்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று கம்பன் சொல்வதாகவும், இபிகோ 84வது சட்டவிதியின் முன்னோடி என்று பேசி ராமனோடு சேர்த்து கம்பனையும் வைரமுத்து தனது நூலில் இழிவுபடுத்தியுள்ளார்.ஏற்கனவே ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசி, அதன் மூலம் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிந்துள்ள நிலையில், தற்போது இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனை பற்றி அவதூறாக தனது தமிழாற்றுப்படை நூலில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளது கண்டனத்துகுரியது. இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவை காவல்துறை கைது செய்வதோடு, அவர் எழுதியுள்ள தமிழாற்றுப்படை நூலை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.