எனக்கு நேரடியாகப் பரிச்சியம் இல்லாதவர், என் முகநூல் நண்பரும் அல்லர். அவர் தான் திரு .கே.எஸ்.ராதாகிருஷ்ணன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். ஆனால், சமூக வலைத் தளங்களில் மிகவும் பொதுப்படையாக அரசியல் வரலாற்றுப் பதிவுகளும், இடையிடையே இலக்கியப் பதிவுகளும் இட்டு வருபவர். அவர் பதிவுகள் பல என்னைக் கவர்ந்தவை.
இன்று ஓர் ஆங்கிலக் கவிதையை நினைவூட்டி அவர் இட்டிருந்த பதிவு என்னை ஈர்த்தது.
“The boast of heraldry, the pomp of power,
And all that beauty, all that wealth e’er gave,
Awaits alike the inevitable hour.
The paths of glory lead but to the grave.”
By Thomas Gray, Elegy Written in a Country Churchyard.
மேற்சொன்ன வரிகள் இடம்பெற்ற அந்த அமர கவிதையை, ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை விஸ்வம் படித்துக் காட்டி விளக்க; சுகி.சிவம், சு. ரவி, கண்ணன், கிரேஸி மோகன், பாபு, நான் உள்ளிட்ட சிந்தனைக் கோட்டத்தின் உறுப்பினர்களாகிய சுமார் பத்துப் பன்னிரண்டு பள்ளி மாணவர்கள் சுற்றி அமர்ந்து கேட்ட அம்பத்தூர் வித்யா சாகர் பள்ளித் தலத்தின் வெளிப்புற மர நிழல் இன்னும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. அன்றிரவே, அந்தப் பள்ளியின் மொட்டை மாடியில் சிறு விளக்கு வெளிச்சத்தில் முருகு சுந்தரம் கவிதைகளை நான் என் சக நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. ஓ அந்த இனிய நாட்கள் !
தாமஸ் க்ரேயின் அமர வரிகளைத் தமிழில் அமர்த்த முயற்சி செய்துள்ளேன்:
……
ஆடம்பர அணிகலன்கள்
அதிகார மமதை
அத்தனை அழகும் செல்வத்தால் பெற்றனவும்
காத்திருப்பதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு கணத்துக்கே
பொலிவுமிக்க பாதையெல்லாம் போயடையும் கல்லறைக்கே
(தாமஸ் க்ரே)
கட்டுரை: வழக்கறிஞர் ரவி



