ஒரு விஷயம்.. மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு வருகிறது. பலரும் பகிர்கிறார்கள். அது, சபரிமலை ஐயப்பனுக்கும் கேரள வெள்ளத்துக்கும் முடிச்சு போடுவதுதான்!
அதாவது நான் தனியாக இருக்கிறேன்… என்னை வந்து பார்க்க யாரும் வரவேண்டாம் என்று ஐயப்பன் கோபம் கொண்டு இப்படிச் செய்து விட்டாராம்…! என் எண்ணத்தை மீறி, பெண்களை அனுமதிப்பதா என்று கோபம் கொண்டு இப்படி கேரளத்தை மூழ்கடித்து விட்டாராம்!
ஐயப்பனை தெய்வம் என்று கருதினால்… இப்படி யாரும் இழிவு படுத்த மாட்டார்கள்.
முதலில் சினிமா பக்திப் படங்களைப் பார்த்துப் பார்த்து சாமி கோவித்துக் கொள்ளும், கண்ணை குத்தும், எரிமலை வெடிக்கும், பூகம்பம் வரும், பிரளயம் வெடிக்கும், கடல் சீறும்… இப்படியெல்லாம் காட்சியைக் காட்டிக் காட்டி, மிரட்டி மிரட்டி, தெய்வத்தின் பேரில் பயத்தை வர வைத்திருக்கிறார்கள்.
இயற்கையே தெய்வம் என்பது நம் முன்னோர் வழி. இயற்கையை வழிபட்டதும் அதற்கு தீங்கு செய்யாதிருத்தலும் அவர்கள் கண்ட வழி. பாம்பும் யானையும் குரங்கும், மீன் ஆமை சிம்மம் காளை என சகல உயிர்களும் தெய்வாம்சம் பொருந்தியவை என்பதால்தான், அவற்றின் மூலம் இறைவன் அவதரித்தான் என புராணங்களைப் படைத்து வைத்தார்கள்!
நாம் எப்போதும் புத்தகத்தின் அட்டையை மட்டுமே பார்த்துவிட்டு, புத்தகத்தைப் படித்ததாய் மிதப்பு கொள்பவர்கள் என்பதால், உள்ளிருக்கும் அறிவுப் பொக்கிஷங்களை மறுதலிப்பவராகிறோம்.
புராணங்களின் உள் தத்துவத்தை விட்டு விட்டு, உருவங்களை மட்டுமே கொண்டாடுபவர்கள் என்பதால், கதைகளும் கற்பனைகளும் அச்சங்களும் அவலங்களும் நம் மதத்தில் வெகு அதிகம்! ஆனால், உருவங்கள் – அட்டைப் படத்தைப் பார்த்து ஒரு புத்தகத்தை வாங்கத் தூண்டும் வசீகரங்கள் அவ்வளவே!
ஐயப்பன் கோபம் கொள்வானா? முதலில் தெய்வமே அப்படி சீற்றம் கொள்ளுமா? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
இயற்கை எனும் இந்திரனை வழிபட்ட ஆயர்குல மக்கள், கண்ணன் பேச்சால் படையலை மடை மாற்றியதில் பெரு மழை பெய்து, கண்ணன் கோவர்த்தன கிரியை சுமந்து மக்களைக் காத்தான் என பாரதம் பேசுகிறது.
நம் தமிழ் மரபில், இறைவனுக்கு இறையிலி நிலங்கள் எழுதி வைத்தார்கள். மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுதலை முன் வைத்து நிலங்களை கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். மழை பெய்து பெரு வெள்ளம் ஆன நிலையில், மழை நிற்க வேண்டும் என்று மீண்டும் வேலி நிலம் கொடுத்ததை எல்லாம் தேவாரப் பாடல்களில் காணலாம்.
வேண்டுதலை நிறைவேற்றுவதுதான் தெய்வத்தின் பணி. வேண்டுதலுக்காக ஒரு நிகழ்வை முன்னிறுத்துவதல்ல.
இப்படி அழிவைச் செய்வது, அரக்கர்களின் வேலை. அரக்கர்களை அடக்குவதற்கு தெய்வம் அவதரிக்கும். இன்றும் நாம் அரக்கர்களாய் இயற்கையை சிதைக்கிறோம். தெய்வம் தன் அம்சமாய் அவ்வப்போது தன்னை காட்டிக் கொள்கிறது. அதற்காக தெய்வமே இயற்கையை இப்படி சிதைக்காது!
கேரளத்தில் போய்ப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். மலை வளம் கொண்ட பகுதி. இவ்வளவுக்கு வனத்தை அழித்து சந்து பொந்திலெல்லாம் வீடு ஹோட்டல் கட்டி வியாபாரத் தலங்களாக்கி வைத்திருந்தாலும், இன்னும் கொஞ்சம் வனத்தின் வாசனை இருக்கத்தான் செய்கிறது.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த முன்னாள் செங்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த எங்கள் பகுதி என்பதால், அச்சங்கோவில், ஆரியங்காவு, குழத்துப்புழ, பத்தனம்திட்ட, சபரிமலை ஆகியவற்றுக்கு அடிக்கடி சென்று வரும் பழக்கம் உள்ளவன். அந்த மக்களின், அந்தச் சூழலின், அந்த இடத்தின் தன்மையை ஆழ்ந்து அனுபவித்து அசைப் போட்டிருக்கிறேன்.
ஆரியங்காவு ஐயனின் அழகிய திருவடிவை அருகிருந்து பார்த்திருக்கிறேன். அச்சங்கோவில் ஐயனின் கல் விக்ரஹத் திருமேனியை ஆழ்ந்து தரிசித்திருக்கிறேன். மற்ற தலங்களில் கல் வடிவம் வெறும் ஒரு கல்லாகவோ, வடிவமற்ற சுயம்புவாகவோ, பெட்டிகளில் சாளக்ராமக் கற்களை வைத்து வணங்குவது போலோ இருக்கும்!
சொல்லப் போனால், நாம் வனதேவதைகளை வணங்குகிறோம். இது தொன்மை மரபு. ஐயப்பனும் ஒரு வனராஜன் தான்!
மனித குலத்தில் அவதரித்த வாமன, பரசுராம, ஸ்ரீராம, பலராம, கிருஷ்ணர்கள் எல்லாம் எப்படி விஷ்ணு அவதாரங்களாய் கொண்டாடப் படுகின்றனரோ, அது போல், தர்மசாஸ்தாவின் மனித அவதார வடிவமாய் ஐயப்பன் கொண்டாடப் படுகிறார். இவை எல்லாமே நம் உணர்ச்சி, உணர்வு, நம்பிக்கையின் அடிப்படை! நாம் விஷ்ணுவையும் கண்டதில்லை, சாஸ்தாவையும் கண்டதில்லை! காணுமாறு நம் முன்னோர்களால் உணர்ந்து அனுபவிக்கப் பட்டு அதனுள் இழுக்கப் பட்டிருக்கிறோம். அது அவர்கள் கண்ட அதே வழியில் இருக்கட்டும் என்றே செயல்படுவோம்! அதில் கேள்வி கேட்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், அவற்றின் உள்ளர்த்தத்தை உணர வேண்டிய தேவைதான், நம் மனத்தின் வளர்ச்சி. மதத்தின் வளர்ச்சி!
நம் மதம், வானியலை, பிரபஞ்சத்தின் ஒழுங்கமைவை, இயற்கையின் சூட்சும ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டது. அதிலிருந்து தெய்வங்கள் தோன்றினார்கள். நதிக்கரைகளில் பாடங்களாகத் துவங்கி நதிக்கரை ஆலயங்களில் வளர்ந்து, இன்று வீடுகளிலும் சிறிய அறைகளிலும் முடங்கிப் போய்க் கிடக்கும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறது நம் மதக் கொள்கைகள்!
ஆரியங்காவு ஐயப்பனின் அழகிய வடிவம் காணும் போது, அதுவும் இடது காலை மடக்கி பீடத்தில் குத்திட்டு அமர்ந்த நிலையில் வைத்து, வலது காலை கீழே தொங்கவிட்டு, இடது கரத்தை இடதுகால் முட்டியில் வைத்து, சிரத்தில் ஜடை முடி மேல் நோக்கி இருக்க… வனராஜனின் வனப்பான வடிவத்தைக் காணும் போதெல்லாம், சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பனின் வரலாற்றுக் கதை நினைவுக்கு வரும்!
தன் கோயிலையும் தன் பகுதியையும் காத்து மீண்டும் இயற்கையை சமன்படுத்த எடுத்த அவதாரமாக வரலாற்றுக் கால ஐயப்பன் சரிதம் சொல்லப் பட்டிருக்கிறது.
ஆகவே, இந்தப் பெருமழையில், வெள்ளத்தில், புயலில் மக்களைக் காத்து வாழ்விக்கச் செய்வதே தெய்வமாக நாம் போற்றும் ஐயப்பனின் இயல்பாக இருக்க முடியும்! தன்னை சீண்டுகிறார்களென்று அவன் தண்டனை தருவதாக இருந்தால், யார் சீண்டுகிறார்களோ அவர்களுக்குத் தருவான்.
முன்னர் ஐயப்பன் கோயிலை தீயிட்டு கம்யூனிஸ்ட்கள் எரித்தார்கள். சிலையை உடைத்தார்கள். அப்போதெல்லாம் ஐயப்பன் பொங்கி எழவில்லை! பேரழிவைத் தரவில்லை! சோழி குலுக்கி ஊருக்கெல்லாம் பிரச்னம் பார்த்து சோலியைப் பார்க்கும் கேரளக் கோயில்களில் உள்ள நம்பூதிரிமார்களின் சேட்டைகளையும் சாஸ்திர – விதிமீறல்களையும் ஐயப்பன் சகித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
தன் கோயிலுக்கு குறிப்பிட்ட வயதுப் பெண்கள் வரக்கூடாது என்பது (சரிதத்தின் படி) ஐயப்பனின் முடிவு! அதனை மீறுபவர்களுக்கு நீங்களே நம்பும் சினிமாக் கதைகளைப் போல், யானை மதம் பிடித்து மிதித்தோ, பாம்பு படமெடுத்து சீறியோ, தண்ணி அடித்து ஓட்டுபவனின் லாரி மோதியோ, திடீரென தலை சுற்றி மலையில் இருந்து வீழ்ந்தோ, அல்லது மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி கம்பியின் போல்ட் கழன்று அவன் மண்டையில் விழுந்தோ…. அட எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்களேன்… அப்படி ஒரு தண்டனையை அவன் கொடுத்துக் கொள்வான்! ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தமாக ஊரை அழித்து விடும் அளவுக்கு ஐயப்பன் அரக்கனோ ராட்சதனோ இல்லை! அவன் தெய்வம்!
அவன் தெய்வம் என்று நம்புவீர்களானால்… இனி ஒரு முறை கேரள வெள்ளத்துக்கும் ஐயனுக்கும் முடிச்சு போடாதீர்கள்!
இந்த முறை மழை ஜூன் முதல் வாரம் துவங்குவதற்கு பதிலாக மே மாதமே துவங்கியது. எங்கள் ஊரில் சிலு சிலு காற்று! மே மாத வெயில் இல்லை! ஆச்சரியமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வந்தது. அதுவே கூட, இந்தப் பருவ நிலை மாற்றத்தின் அறிகுறியே!
இந்த இயற்கைப் பெருமழை தானாக வெள்ளப் பெருக்கெடுத்து சென்றிருக்கும்!
அணை போட்டு தடுத்து, திடீரென திறந்து விட்டது மனித தவறு!
நீர் செல்லும் ஆறுகளில், கால்வாய்களில், வாய்க்கால்களில் அடைப்பு எடுக்கும் வகையில் இடத்தைக் கட்டி, மண்ணைக் கொட்டி ஆக்கிரமிப்புகளால் அசிங்கப் படுத்தியது மனிதத் தவறு!
தவறுகளை எல்லாம் மனிதன் செய்துவிட்டு, தெய்வத்தின் மீது பழியைப் போடுவது, தெய்வத்தைப் புகழும் அடிமையின் குணம் அல்ல, தெய்வத்தை இகழும் அரக்கனின் குணம்!
எனவே, இனியும் கேரள வெள்ளத்துக்கு ஐயப்பனின் கோபம் காரணம் என செய்திகளைப் பரப்பாதீர்கள், பகிராதீர்கள்!





மரà¯à®•à¯à®• à®®à¯à®Ÿà®¿à®¯à®¾à®¤ உனà¯à®®à¯ˆ. சà¯à®µà®¾à®®à®¿à®¯à¯‡ சரணமà¯.