இந்நிலை மாறுமா ?தீருமா?

Published:

corona poem
corona poem

இந்நிலை மாறுமா தீருமா?
– கோபால்தாசன் –

முழு முகமின்றி
அரைமுகமாகும்
மனிதம்

தலைக்கவசத்திலிருந்து
முகக்கவசம்
உயிர்க்கவசமானது

கர்ப்பம் தரித்தவள்
குழந்தை பெற்றவள்
அச்சத்தினில்

குழந்தையோ
பெரியவரோ
பக்கத்திலிருந்து பேசவோ
இறந்துபோனால் பார்க்கவோ
நாதியில்லை

இன்றைக்கு அல்லது
இம்மாதம்
வேலை இருக்குமா அல்லது
வேலையில் இருக்கிறோமா?

இன்றைக்கெப்படியோ
கழித்து விட்டோம்
இனி நாளைக்கு?

குழந்தைகள் பக்கம் வந்தால்
இடைவெளி
கணவன் மனைவி நெருக்கத்தில்
அடிதடி

நள்ளிரவு போன்று
மாலை ஆறு மணி ஆனால்
கடைகள் சாத்தப்படுகிறது
பொருள்களுக்கு
நாளை என சமிக்ஞை செய்யப்படுகிறது

ஆளரவமற்ற சாலைகள்
வெளிச்சத்தை இழந்து
இருளை உமிழ்கின்றன

நூறு ஆண்டுகளுக்கு முன்னே
நகரம் இப்படித்தான் இருந்ததா?

அலுவலகத்தின் அருகில் இருக்கும்
நாயர் கடையில்
நண்பர்களோடு
சாயா கேட்டு எத்தனை நாளாயிற்று?

அதன்
பக்கத்தில் இருக்கும் பெட்டிக் கடையினில்
முப்பத்திரண்டு பக்க
நாளிதழை வாங்கி புரட்டிய நாள்
மறந்தே போயிற்று?

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

பேருந்தில்
ஒருவரையொருவர்
இடித்தபடி ஏறியது
ஷேர் ஆட்டோவில்
உரசிய படியும்
பயணம் செய்தது

சனிக்கிழமை
இரவு காட்சிக்கு
திரையரங்கிற்கு
குடும்பத்துடன் சென்றது

உறவுகள் நட்புகளுடன்
வீட்டில் அரட்டையும்
கும்மாளமிட்டதும்
இனி எப்போது?

கடைசியாய் குழந்தைக்கு
முத்தமிட்டது
மறந்தே போயிற்று?

முன்பெல்லாம்
அலுவலகமே வீடாக
இப்போது
வீடே சிறையாக

சேனல்களில்
செய்தியைப்
பார்த்து பார்த்து
பேச்செல்லாம்
கொரனோவாகவே
மாறிவிட்டது

ஒரு துக்க நிகழ்வு
ஒரு நல்ல நிகழ்வு
எதுவுமின்றி

வாழ்வது எதற்காக
யாருக்காக
நமக்காகத்தானே-

ஒன்று சேர்ந்தால்
முடியாதது
எதுவுமில்லையே?

Related articles

Recent articles

spot_img