
கெட்டிருந்த நாடுதன்னை ஒட்டவைக்க ஒருகுழந்தை
எட்டயத்து புரமதனிற் பூத்து வந்தது – அதன்
கட்டளைக்கு எட்டுதிக்கும் காத்தி ருந்தது.
பாரதத்து மீதுதோன்றிப் பாரனைத்தும் ஆள்வதற்கு
வீரமோடு நல்லறிவும் தாங்கி வந்தது – அது
பாரதியின் கருணைபெற்று ஓங்கி வந்தது.
சுப்பையா என்னுமவன் செப்புமொழி கேட்டுவிட்டு
மெய்ப்புலவர் பாரதியாம் பட்ட மளித்தார் – அவன்
துப்பியசொற் கேட்டுபிறர் தொப்பை இளைத்தார்.
பிறப்புமுதல் துலங்கிநின்ற அறிவுகண்டு அனைவருமே
சிறப்புடனே வாழ்கவென்று ஆசிபுகன்றார் – அவன்
இறவாப்புகழ் அடைவனென்று பேசி மகிழ்ந்தார்.
கம்பனுக்குப் பின்னாலே அம்புவியை ஆளவந்த
உம்பர்குலக் கவிவேந்தன் பாரதி தானே? – அவன்
வெம்பிநின்ற தமிழ்க்கொடியைத் தழைக்கவைத் தானே.
உலகத்தில் மிளிர்கின்ற பலமொழியும், இலக்கியமும்,
பலகலையும் ஆய்ந்தறிந்த அறிஞன் தானே – அவன்
தலையெனவே கொண்டதுநம் தமிழினைத் தானே.
சொந்தமொழித் திருநிலமாம் செந்தமிழை வாழவைக்க
முந்திவந்த சிந்துபொழிக் கவிதை மேகம் – அவன்
சந்ததமும் போதையூட்டும் காதல் ராகம்.
பூச்சிதறும் வண்ணமொழிப் பேச்சொன்றே இனிதென்று
மூச்செல்லாம் தமிழாகும் மேன்மை கண்டான் – உயிர்க்
கூச்செறியக் கவிபாடும் பான்மை கொண்டான்.
தொட்டணைத்த வறுமையிலும் திட்டமுடன் கவிபாடிக்
கிட்டவந்த காலனையே எட்டி உதைத்தான் – அவன்
கட்டறுந்த கயமைகளைச் சுட்டு வதைத்தான்.
நீதியினை நெஞ்சிலேற்றி நாதவழும் கவிதையினால்
சாதியினைச் சாக்கடையில் சரிய வைத்தவன் – விழிச்
சோதியிலே தீமைகளை எரிய வைத்தவன்.
பூமியெங்கும் சூழ்ந்துநின்ற தோமிருளை நீக்குதற்குத்
தீமுகத்துச் சூரியனாய் ஒளியை வீசினான் – அவன்
பாமரரும் வீறுகொள்ளக் கவிதை பேசினான்.
படுதளைகள் அறுந்துகெட விடுதலையைக் காணுதற்குச்
சுடுங்கனலாற் சொற்கருவி தீட்டி வைத்தவன் – அவன்
விடுங்கணையாற் பகையுயிரை வாட்டி நைத்தவன்.
பாடுகின்ற திறங்கேட்டு ஆடிநின்ற வெள்ளையரை
ஓடுஎன்று விரட்டிவந்த ஒற்றை வேங்கை – அவன்
பாடமதன் வெறியேறிப் பேசும் மூங்கை.
எங்கெங்கும் சக்திகண்டு அங்கவளின் பக்திகொண்டு
மங்காத மணிக்கவிதை நூறு படைத்தான் – அவன்
பொங்கிவரும் கங்கையெனச் சாறு வடித்தான்.
உண்மையான கடவுளென்று கண்ணனையே எண்ணிநின்று
பண்பலவும் பாடிவைத்து ஏற்றிய பித்தன் – அவன்
பெண்மையதன் பெருமையினைப் போற்றிய வித்தன்.
நிலமெங்கும் மனிதனவன் குலமொன்றே என்றறைந்து
நலம்வாழும் நெறிகாட்டி நடந்த தலைவன் – வாழ்வின்
இலக்கணத்தை நிலைநாட்டப் பிறந்த புலவன்.
பாப்பாவை அருகழைத்துப் பாப்புனைந்து நீதிசொன்ன
தூப்புமிகு தெய்வீகக் கவிதை அரசன் – அவன்
மூப்பின்றி முழங்குகின்ற புதுமை முரசம்.
தீஞ்சுவைசேர் காப்பியமாம் பாஞ்சாலி சபதமதில்
வான்சிவக்கும் தேசபக்திக் கனலும் வைத்தான் – குளிர்
பூஞ்சுனைபோல் வேதாந்தப் புனலும் வைத்தான்.
குயிற்பாட்டில் உடல்வாட்டும் உயிரோட்டக் காதலினை
உயர்வாக்கி உள்ளார்ந்த தத்துவம் செய்தான் – தமிழ்ப்
பெயரோங்கத் தரணியெலாம் சொற்றவம் செய்தான்.
பார்வணங்கும் மாகவியின் கீர்த்தியினை இன்றுஇங்கு
யார்யாரோ மேடையேறிப் பாடு கிறாரே? – அவர்
பேர்பேராய்ப் பதிப்புரைகள் போடு கிறாரே?
நேற்றுவரை பாரதியைத் தூற்றியவர் ஒன்றுகூடிப்
போற்றவந்த காரணந்தான் என்ன, என்ன? – அவர்
மாற்றுமனம் கொண்டது’தான்’ மின்ன, மின்ன.
தீச்சுடர்போல் துலங்குமொழி வீச்சுதரும் பாரதிதான்
பேச்சுடனே போவதற்கா கவிதை இசைத்தான்? – மேற்
பூச்சுக்கா தமிழ்த்தாயின் உயர்வை நசைத்தான்?
காசுக்காய்ப் பாரதியைப் பேசிவிட்டுப் பறந்துவிடும்
வேஷதாரிப் பறவைகளே, கொஞ்சம் நிற்பீர்! – நன்கு
யோசித்து அவன்வழியில் நடக்கக் கற்பீர்!
இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாள்: 11-10-1982.