உன் மனசைப் பார்த்தேன் காதல் வந்தது… சொல்லத்தான் எனக்கும் ஆசை! ஆனால்… உன் மனசைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை! உன் உள்ளப் பொலிவைக் காணும் ஆவலில் நாள்கள் கடந்து போயின… தாபத்தில் தவித்து நான் நிற்க கோபத்தில் முறைத்து கோணி நின்றாய்! உள்ளத்தை மறைத்து ஊடல் கொண்டாய்! பாரென்றெனைப் பார்க்க வைத்து வேறென்று நீ வேறாகிப் போனாய்! ஆனாலும்… உன் பொலிவான நிலா முகமும் ஊடுருவும் திராட்சைக் கண்களும் சரிவான சங்குக் கழுத்தும்தான் கவர்ந்திழுத்து கபளீகரம் செய்தன! நெற்றிமேல் கோடிட்ட நடு வகிடு இடை வரை நீளும் பின்னிய கூந்தல் புருவ மத்தியில் மின்னும் கருப்புப் பொட்டு நெற்றியில் ஒளிரும் குங்குமக் கீற்று இயற்கையின் திருஷ்டிப் பொட்டாய் மரு முகத்தில் ஒளிரும் ஒற்றைக் கீற்றாய் மூக்குத்தி புன்னகை பூக்கையில் குவியும் கன்னக்குழி சிரிக்கையில் பளீரிடும் பற்களின் வரிசை அடடா… இவை எல்லாம்தான் இந்த ஈர்ப்பின் அடித்தளமோ..? என் மனதில் உன் பிம்பம் அழகாய்ப் பதிவானதில் உன் தவறு எதுவுமில்லை… என் தவறும் எதுவுமில்லைதான்! இது இயற்கையின் சதி! உன்னில் விழுந்தது என் விதி! நமக்குள் ஒரு பரிவர்த்தனை யோகம் அறிவின் தெளிவை அளிக்கிறேன் நான்… அழகின் அமுதை அளிக்கிறாய் நீ! ஞானச் சூரியனாய் நான்… நிலவின் குளிர்ச்சியாய் நீ! என் ஒளி வாங்கி எதிரொளித்துப் பிரகாசிக்கிறாய்! உன்னாலே என் உள்ளம் ஒளி பொருந்தி நிற்கிறது! உள்ளத்தின் அன்பை உலகுக்குக் காட்டியபடி!
உள்ளம் : உனதும் எனதும்!
Popular Categories


