கோவைப் பழ உதட்டின் ஈர்ப்பு… கோவையாய்க் கிளம்பின சொற்கள்! விட்டுப் போய் விலகி நின்றாய்! விட்டு விட்டுக் கிளறும் எண்ணம்!
இது இயலாது என என்னால் கைவிடப்பட்ட வேலை! தடைப் பூட்டு தொங்கியது! உன் விழியோர வீச்சு அதைத் திறக்க வைத்தது! எல்லாம் காதலின் அபார வலிமைதான்! உணர்ந்து கொண்டேன்!
உன் மலர் விழிகளுடன் என் மலர்ந்த விழிகள் மோதிக் கலந்த போது… என் தேவைகள் தீர்ந்த நிறைவு! இனி வேண்டுவது எதுவும் இல்லை என்ற நினைப்பு.. ! அட.. நானும் காதல் வயப்பட்டிருந்தேன்!
எனக்குள்தான் எத்தனை எத்தனை கேள்விகள்… எத்தனை பிரார்த்தனைகள்! எல்லாவற்றுக்கும் கிடைத்தது ஒரே விடை ! கண்டு கொண்டேன் அதை! – உன் மீதான காதலின் வடிவாய்!
ஆனால்… ஆனால்… முதல் கோணல் முற்றும் கோணல்! கோலம் போடும் கை! கோணித்தான் போகிறது! காத்திருந்து காத்திருந்து.. என் வாழ்நாளில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றபடியாய்… உன்னில் வயப்பட்டேன்..! ஆனால்.. வாழ்க்கை வண்டியில் பயணம் தொடங்க… முதல் கியர் போடும்போதே ப்ரெக்-டவுன் ஆனது என் துரதிர்ஷ்டம்தான்!
உன்னைச் சுற்றியே உலகை மறந்திருந்தேன் ~ உன்னை நெருங்கிய போதெல்லாம்… நீ இத்தனை நாளாய் என்னை முறைத்தாய்! கணிக்க இயலாதவனாய்.. என்னைப் புறக்கணித்தாய்! போதும் பெண்ணே போதும்! உன்னில் நான் விழுவதும் தன்னில் பின் எழுவதும்! இதோ… இனி என் முறை..! புறக்கணிப்பின் வலியை உன்னை உணரச் செய்கிறேன்! இனி நான் முறைத்துச் செல்வேன்! உன்னை முழுதாய்ப் புறக்கணிக்கிறேன்! இனி என் உலகம் என்னுள்ளேயே இருக்கட்டும்! என்னுள்ளேயே இயங்கட்டும்!


