சென்னை:
முதல்வர் பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், அவரது கையெழுத்து மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சட்டச் சிக்கல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஆளுநர் ஆலோசனை கேட்டுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா தொடர்பாக, புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், என்ன முடிவு எடுப்பது என, ஆளுநர் அலுவலகம் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பன்னீர்செல்வம், ராஜினாமா கடிதம் கொடுத்த நாளில், ஆளுநர் மும்பையில் இருந்தார். அப்போது, முதல்வரின் ராஜினாமா கடிதத்தை, ‘பேக்ஸ்’ அனுப்பி விட்டு, ஒரிஜினலை, ஒரு கவரில் வைத்து, சசிகலா தரப்பினர், ஆள் மூலமாக ஆளுநர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அதை அதிகாரிகள் பெற்ற நிலையில், உடனடியாக ராஜினாமாவை ஏற்றதாக, கடிதம் வேண்டும் என, ஆளுநர் அலுவலகத்துக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
ஊட்டி ராஜ்பவனில் இருந்த ஆளுநரை தொடர்பு கொண்டு, ராஜினாமா தகவலை தெரிவித்துள்ளனர். பின், அவரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டும் என, அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவரும், அங்கிருந்தபடியே ராஜினாமா ஏற்பு கடிதம் வழங்க, ஆளுநரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுக்கு
உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னைக்கு வந்த ஆளுநர், சீலிட்ட கவரில் இருந்த ராஜினாமா கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதில், பன்னீர்செல்வத்தின் கையெழுத்தில் மாற்றம் இருந்துள்ளது. அதாவது, கையெழுத்தின் அருகே, பிற்பகல், 1:41 மணி என, ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது. அதை, அவசரத்தில் தேதி என நினைத்து, சசிகலா தரப்பினர் அனுப்பி விட்டனர்.
இதற்கிடையில், தன் கையெழுத்துடன், நேரம் குறிப்பிடும் பழக்கம் இல்லை என்பதால், ராஜினாமா கடிதமாக, அதை ஏற்கக்கூடாது என, பன்னீர்செல்வம் தரப்பில், ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அரசியல் சட்டத்தின்படி, முதல்வர், தன் ராஜினாமா கடிதத்தை, ஆளுநரை நேரில் சந்தித்து தந்தால் மட்டுமே, அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது.
ராஜினாமா கடிதத்தை, பன்னீர்செல்வம், ஆளுநரிடம் நேரில் வழங்கவில்லை. இதிலும், பன்னீர்செல்வத்தின் பக்கமே, சாதகமான சூழல் உள்ளது.
அதனால், பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமே செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சசிகலா, ஆளுநரிடம் வழங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தில், பன்னீர்செல்வம் பெயரும் உள்ளது.
அவர் தான் முன்மொழிந்ததாக கூறப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அவரது பெயரையும், சசிகலா தரப்பினர் சேர்த்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததாக, வெளியான கடிதத்தில், ‘பேக்ஸ்’ நேரம், 7:22 மணி என்றும், தேதி, ஜன., 1, 2013 என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடிதத்தை, ஆளுநர் ஏற்க முடியாத நிலை உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரம் கூறுகிறது.