சசிகலா Vs பன்னீர் : ஒப்பிடுகிறார் ராமதாஸ்

Published:

சென்னை:
தலைமைப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழகத்தில், கட்டாயத்தின் பேரில் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் நிலை குறித்து தனது முக நூல் பக்கத்தில், ”ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாமக., ராமதாஸ் கூறிய கருத்துகள்…

தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய ‘‘தலைவர் தேடல்’’ போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று வரை பணியாளராய், சில நேரங்களில் துரோகியாய் அறியப்பட்டவருக்கும், நேற்று முன்நாள் வரை அம்மாவுக்கும், நேற்று வரை சின்னம்மாவுக்கும் துதிபாடி பாத பூசை செய்து வந்தவருக்கும் இடையே அரசியல் முதலாளியின் இடத்தைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நேற்று வரை சின்னம்மா என்றும், அன்புச் சகோதரர் என்றும் வாழ்த்துப்பா பாடிக்கொண்டிருந்த வாய்கள் இப்போது தாழ்த்துப்பா பாடிக்கொண்டிருக்கின்றன.

அந்தக் கட்சியில் இதுவரை விசுவாசம் என்று வெளியில் சொல்லிக்கொண்டு அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நிர்வாகிகளும் கூட, இப்போது ‘இசை நாற்காலி’ போட்டியில் திடீரென பாட்டு நிறுத்தப்பட்டவுடன் எந்த நாற்காலியில் இடம் கிடைக்கும் என்று தேடும் போட்டியாளர்களைப் போல, எந்த அணிக்குச் சென்றால் பதவி நாற்காலி கிடைக்கும் என்று அலையத் தொடங்கியிருக்கின்றனர்.
அந்தக் கட்சியில் உள்ள தொண்டர்களும், மற்றவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு உடன்பிறவா சகோதரியாக இருந்ததால் சசிகலா தான் எங்கள் தலைவி என்று ஒரு தரப்பினர் முழங்க, இன்னொரு தரப்பினரோ மன்னார்குடி மாஃபியாவை எதிர்க்கும் ஓ.பி.எஸ் தான் எங்கள் தலைவர் என்று இன்னொரு தரப்பினர் கொண்டாடுகின்றனர். இந்த இரு தரப்பினருமே தலைவர் போட்டியில் களமிறங்கியுள்ள இருவரின் பின்னணியை அறியாதவர்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நல்ல தலைவர்கள் உள்ளனர் என்ற உணர்வே இல்லாதவர்களாக உள்ளனர் என்பது தான் கொடுமை.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தராசுத் தட்டுகளில் வைத்தால் முள் வேண்டுமானால் முறிந்து போகுமே தவிர எந்தத் தட்டும் தாழவோ, உயரவோ செய்யாது. அந்த அளவுக்கு அனைத்திலும் இருவரும் சமமானவர்கள்.

* இவர்களில் முதலாமவர் மூன்று ஆட்சிகளிலும் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர். இரண்டாமவர் இரு ஆட்சிகளில் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

* முதலாமவர் 1991-96 ஆட்சியில் சென்னையில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் வளைத்து மிரட்டிப் பறித்தவர் என்றால், இரண்டாமவர் தேனியில் தொடங்கி கேரளத்தின் மையம் வரை ஏராளமான சொத்துக்களை இனிக்கப் பேசி பணத்தால் அடித்துப் பிடுங்கியவர்.

* சசிகலாவும் அவரது சொந்தங்களும் 10 நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால், பன்னீர்செல்வமும், அவரது சொந்தங்களும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.

* ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது கூலிப்படையை ஏவி அமிலம் வீசியது சசிகலாவின் சாதனை என்றால், பெரியகுளம் கோவிலின் தலித் பூசாரி நாகமுத்துவை மிரட்டி, அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்தது பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் சாதனை.

* சசிகலா குடும்பத்தில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். தினகரன் அதிமுக பொருளாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். வெங்கடேஷ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர். மகாதேவன் ஜெயலலிதா பேரவையில் கோலோச்சியவர்.

* ஆனால், பன்னீரின் குடும்பம் அனுபவித்த அதிகாரமோ இன்னும் பெரியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும் கூட தேனி உள்ளிட்ட மதுரை மண்டல அதிமுக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரகுமாரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தவிர முன்னாள் காவல் துறை அதிகாரியான ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி ஓய்வுக்குப் பிறகும் காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர். பன்னீர் செல்வத்தின் மகளை திருமணம் செய்த காசிராஜன் வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர். காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன் மதுரை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர். இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர் என ஒரு பட்டாளமே ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி அதிகார மட்டத்தில் ஆட்டம் காட்டியவர்கள்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

* தமக்கும் கட்சிக்கும் துரோகம் செய்ததாகக் கூறி சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. இவர்களில் இராவணன் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன.

* கட்சிக்கும், தமக்கும் துரோகம் செய்ததாக பன்னீர்செல்வம் குடும்பமும், அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு அவர் பெயரிலும், அவருக்கு தெரிந்தவர்கள் பெயரில் இருந்த சொத்துக்களும் எழுதி வாங்கப்பட்டன. பன்னீர்செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் வாங்கப்பட்டன.

* சசிகலா குடும்பத்திற்காக ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வளைக்கப்பட்டது என்றால், பன்னீரின் மகன் இரவீந்திரநாத் வணிகம் செய்வதற்காக தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் வினியோகிக்கும் உரிமை அவரைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப்படக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் இயற்றப்பட்டது.

* சசிகலாவுக்காக மணல் வணிகம் செய்ய ஆறுமுகசாமி இருந்தால், பன்னீருக்காக மணல் வணிகம் செய்ய சேகர் ரெட்டி உருவாக்கப்பட்டார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இவற்றையெல்லாம் கூடுதல் தகுதிகளாக சசிகலா குடும்பத்தினருக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், பன்னீரில் ஆதரவாளரான சேகர் ரெட்டிக்கு தமிழக அரசின் பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பதவி வழங்கப்பட்டது.

சசிகலா குடும்பத்திற்கு கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தர வேறு ஆட்கள் இல்லாத நிலையில், ஏராளமான ஃபெரா வழக்குகளை சுமந்து கொண்டு இருக்கும் நிலையில், பன்னீர் செல்வம் தரப்போ அன்புநாதன் என்ற தரகரை இதற்காகவே நியமித்து அவர் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களை பத்திரமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது.

இப்படியாக பார்த்தால் ஊரை அடித்து உலையில் போடுவதில் சசிகலாவை விட ஒரு படி மேலே இருக்கிறார் மிஸ்டர் பணிவு பன்னீர் செல்வம். இவரது புன்னகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோதங்கள் தெரியாமல் வெளுத்ததெல்லாம் பன்னீர்…. மன்னிக்கவும் பால் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது அப்பாவிகள் கூட்டம்.
தலைவர் யார்… நல்லவர் யார்? என்பதை கெட்டவர்களுடன் ஒப்பிட்டு முடிவு செய்யக்கூடாது. கொள்கைகள் மற்றும் சாதனைகளுடன் ஒப்பிட்டு தீர்மானிக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img