சென்னை எண்ணூரைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி மகாலட்சுமி தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்வதற்காக மகாலட்சுமி கண்களை மூடியபடி தரிசனம் செய்தார்.
அப்போது அங்கு கூட்டத்துடன் தரிசனம் செய்வதுபோல் நின்ற இருவர் மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி ஒரு கையில் பேரக்குழந்தையையும், மற்றொரு கையில் தாலி செயினையும் விடாமலும் பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.
அதற்குள் தாலி செயினை அறுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆசாமிகளை விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பினர்.
தாலி செயினை பிடித்து இழுத்தபோது மகாலட்சுமிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. புகாரின்பேரில் எண்ணூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.