
மூச்சுத் திணறல் காரணமாக இறந்தவரின் உடலுடன் வந்த 20 பேர் கோவில்பட்டி காவல் சோதனைச் சாவடிக்கு அருகே வந்த போது, சோதனை செய்யப் பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் ராஜன். 65 வயதான அவர், கோயமுத்தூரில் வியாபாரம் செய்து வந்தார். கோவையிலேயே குடும்பத்துடன் வசித்து வந்த அவர், மூச்சுத் திணறல் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மாலை அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் ராஜனின் உடலை எடுத்துக் கொண்டு மூக்குப்பீறி கிராமத்துக்கு வந்துள்ளனர். ஆம்புலன்ஸில் 3 பேர், 3 கார்களில் 17 பேர் என 20 பேர் வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடிக்கு வந்தபோது, போலீஸார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அதில், அவர்கள் உரிய அனுமதியின்றி வந்தது தெரிய வந்ததை அடுத்து வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரது அறிவுரையின்படி கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ராஜனின் உடல் உறவினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் 20 பேரும் திருச்செந்தூரில் உள்ள தனிமைப் படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


