மதுரையில் 15 வயது சிறுமிக்கும் அவரது தாய்மாமாவிற்கும் நடைபெற இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மதுரை செல்லூர் மேல தோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய்மாமாவிற்கும் நேற்று காலை திருமணம் திட்டமிட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்த திருமணம் குறித்து செல்லூர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் மற்றும் போலீசார் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை அங்கிருந்து மீட்டு கடச்சனேந்தல் பகுதியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த அறிக்கையை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து சிறுமியின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
ஊரடங்கை பயன்படுத்தி மதுரையில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.