துபாயில் இந்திய தம்பதியினர் வசிக்கும் வீட்டில் திருட நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் அந்த தம்பதியினரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இந்தியாவை சேர்ந்த ஹிரன் ஆதியா, மனைவி வித்தி ஆதியா மற்றும் 18 மற்றும் 13 வயதுடைய மகள்களுடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 18ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். முதலில், 2,000 திர்ஹாம் இந்திய மதிப்பில் 41,229 ரூபாய் இருந்த பர்சை திருடியுள்ளார். தொடர்ந்து வீட்டில் விலை உயர்ந்த பொருள் உள்ளதா என தேடியுள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். இதனை கண்ட, குற்றவாளி இருவரையும் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அவர்களது 18 வயது மகளின் கழுத்தில் திருடன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். கழுத்தில் லேசான காயமடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டுபிடித்தனர். பின்னர் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ததுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரின் உதவியாளர் கர்னல் அடில் அல் ஜோக்கர், கைது செய்யப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்த திருட்டு சம்பவத்தை திட்டமிட்டு செய்ததாக கூறிய அவர், குற்றவாளி ஒரு வருடத்திற்கு முன்பாக ஹிரன் வீட்டில் வேலை செய்ததாக கூறினார். மேலும் அப்போதே வீட்டில் அதிக பணம் இருப்பதை பார்த்து அதனை திருடும் எண்ணம் குற்றவாளிக்கு ஏற்பட்டதாக கூறினார். இதற்காக திட்டமிட்டு ஒருவருடம் கழித்து இந்த குற்றச்செயலில் குற்றவாளி ஈடுபட்டுள்ளதாகவும் கர்னல் அடில் அல் ஜோக்கர் கூறினார்.
இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் கொலைசெயப்பட்ட தம்பதியினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளோம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.