கோவை: கோயமுத்தூரில் தாய், மற்றும் அவரது இரு குழந்தைகளைக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. கோவை கணபதி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த மருதமாணிக்கத்தின் மனைவி வத்சலாதேவி (28). இவருக்கு மகிலன் (6) மற்றும் 11 மாதக் குழந்தை பிரனீத் ஆகியோர் இருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மருதமாணிக்கம் வீட்டில் இல்லை. அவரது தாயார் கோவிந்தம்மாள் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வத்சலாதேவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். வத்சலா தேவி தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஒர்க்ஸ் ஷாப் ஊழியர் செந்தில்குமார் (32) என்பவர், அவரது வீட்டுக்குள் புகுந்து, வத்சலாதேவியையும் 2 குழந்தைகளையும் கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, குற்றவாளி செந்தில்குமாரைக் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. கோவை அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில், இந்த வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான ஒன்று. இந்த வழக்கின் தீர்ப்பு இனி வருங்காலத்தில் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று நினைக்கத் தோன்ற வேண்டும். கொலையுண்ட பெண்ணின் உடலில் 54 இடங்களில் குத்துப் பட்ட காயம் உள்ளது. எதுவும் அறிந்திராத அப்பாவியான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத 6 வயதுக் குழந்தையின் உடலிலும் 21 இடங்களில் குத்துப் பட்ட காயம் உள்ளது. உலகம் அறியாத இளம் 11 மாதக் குழந்தை உடலில் 11 இடங்களில் குத்துக்காயம் உள்ளது. ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவும் அது நடக்காததால் தன்னை வெளியில் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற பயத்திலும் இந்தக் கொடூரக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. பெண்ணைக் கொன்றதற்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 6 வயதுக் குழந்தையைக் கொன்றதற்காக தூக்குத் தண்டனையும், 11 மாதக் குழந்தையைக் கொன்றதற்காக தூக்கு தண்டனையும், குழந்தைகளிடம் இருந்த நகைகளைத் திருடியதற்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், வீட்டினுள் அத்துமீறிச் சென்றதற்காக ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு வழக்குக்கும் தலா ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறுகிறேன். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும்… என்று கூறப்பட்டுள்ளது.
கோவையில் தாய், குழந்தைகளைக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை
Popular Categories


