: கராச்சி: பாகிஸ்தானில் குற்றவாளிகள் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. இன்று 14 பேர் தூக்கிலிடப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முல்தான் மற்றும் தேரா காஸி கான் சிறைகளில் இருந்த இருவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், 12 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர். பயங்கரவாதம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட இவர்களுக்கான தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். முன்னதாக, பெஷாவரில் ராணுவப் பள்ளி மீது தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 150 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின், தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சுமார் 8 ஆயிரம் பேர் தூக்கு தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். அவர்களில், பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து, தற்போது பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இன்று, பாகிஸ்தானின் ஜனாக், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தான், மயின்வாலி, பைசாலாபாத், குரன்வாலா ஆகிய பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Popular Categories


