செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி மீது பைக் ஒன்று மோதியதில் லாரியும் பைக்கும் தீக்கிரையானது. புனேயில் இருந்து ஆலங்குளம் காய்கறி சந்தைக்கு 15 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி நேற்று செங்கோட்டையில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இலஞ்சிக்கும் தென்காசிக்கும் இடையே வாகன எரிவாயு பங்க் முன்பாக, தென்காசியில் இருந்து இலஞ்சி வழியாகச் சென்ற பைக்குடன் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. அந்தத் தீ, லாரி மீதும் பற்றி மளமளவென பரவி வெங்காய லாரி முழுவதும் தீப் பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தென்காசி மற்றும் கடையநல்லூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் பைக்கில் வந்து தீக்காயமுற்ற இலஞ்சியைச் சேர்ந்த இசக்கிமுத்து (29), மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். வெங்காய லாரி ஓட்டுநர் ராஜன் விபத்துக்குப் பின்னர் தப்பி ஓடிவிட்டார். வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் பங்க் எதிரே இந்தத் தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், பங்க் தப்பியது.
லாரியுடன் பைக் மோதியதில் வெங்காய லாரி தீப்பிடித்து எரிந்தது: தப்பிய பெட்ரோல் பங்க்
Popular Categories


