
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தம்பதியர் கொலைசெய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் அருப்புக்கோட்டையில் இன்று
பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தடயங்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். ஓய்வு பெற்ற ஆசிரியரான சங்கரபாண்டியன் தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணி என்பவருடன் வசித்து வருகிறார்.இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவணத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணியை அவரது உறவினர்களை அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் பிற்பகலில் அவரது உறவினர்கள் சங்கரபாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளனர்.அப்போது சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில் சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது தெரியவந்தது.மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியும் தூவப்பட்டு கிடந்தது.இதனையடுத்து விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் தம்பதியரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்கள் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்தில் டிஐஜி பொன்னி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.மோப்பநாய் கொண்டும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இரு நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் லிட்டில் இருந்த தம்பதியர் கொலைசெய்யப்பட்டு நகை பணம் கொள்ளை போன நிலையில் தற்போது அருப்புக்கோட்டையில் வயதான தம்பதியர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.




