கரூர்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டனர் என்று எழுத்தாளர் முருகேசன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். புத்தகத்தில், புலியூரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட சமூகத்தை இழிவுபடுத்தியும், ஆபாசமாகவும் எழுதியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், புலியூரில் இருந்த எழுத்தாளர் முருகேசனை, ஒரு கும்பல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் எழுத்தாளர் முருகேசன் இது குறித்துக் கூறியபோது, வெள்ளப்பாறை ஆனைப்பட்டியை சேர்ந்த நான், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் புலியூர் வந்தேன். தற்போது, எல்.ஐ.சி., முகவராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த, 15 ஆண்டுக்கு முன் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். கடந்த, ஆறு ஆண்டுகளாக, “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற சிறுகதை புத்தகத்தைத் தொகுத்தேன். இதில், 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்,’ என்ற பகுதியில் ஒரு சமூகத்தை புண்படுத்தும் படி எழுதியிருப்பதாகக் கூறினர். யாரையும் புண்படுத்தும்படி நான் எழுதவில்லை. எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், எனக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் மிரட்டல் விடுக்கப் பட்டது. அதனால், தவறாக எழுதி இருந்ததால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் தெரிவித்தேன். இருப்பினும் ஒரு கும்பல் வீட்டிலிருந்த என்னைத் தாக்கியது என்று கூறினார்.
Popular Categories