திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை அனுமதியின்றி விநியோகித்ததாக அய்யாக்கண்ணு மீது கோயில் நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று திருச்செந்தூர் வந்திருந்தார். அப்போது, கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து துண்டுப் பிரசுரங்களை கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அவர்களிடம் விநியோகித்துள்ளார். இதை அடுத்து, அங்கு வந்த பாஜக., நிர்வாகி நெல்லையம்மாள், அதைத் தடுத்து தட்டிக் கேட்டதும், கைகலப்பு மூண்டது.
இந்நிலையில், அய்யக்கண்ணு மற்றும் உடன் வந்த நபர்களின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு ஆளான நெல்லையமாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதை அடுத்து, அய்யாக்கண்ணுவுக்கு கோயிலில் வைத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அனுமதி கொடுத்தது யார்? என்றும் அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட கோயில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஹெச்.ராஜா வலியுறுத்தினார்.
இதை அடுத்து, திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில், அய்யாக்கண்ணு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.