செங்கோட்டை: அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கக் கோரும் விழிப்புணர்வு ரத யாத்திரையை தனியார் அமைப்பு ஒன்று நடத்தி வருகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து ஆன்மிக அமைப்புகள் ஆதரவில் இந்த ரத யாத்திரை சிவராத்திரியன்று அயோத்தியில் துவங்கி, 41 நாட்கள் பயணித்து ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் செல்வதாக ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது.
இந்த ரத யாத்திரை 5 மாநிலங்கள் வழியே கேரளா வந்து இன்று காலை 9 மணி அளவில் தமிழகத்தின் எல்லையான செங்கோட்டை, புளியரை கோட்டைவாசல் வழியே வந்தது. தமிழகத்திற்குள் வந்த ரதத்துக்கு அப்பகுதியில் உள்ளோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
நெல்லை மாவட்டம், கோட்டை வாசல் பகுதிக்கு வந்த ரதத்தை வரவேற்க, இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.
இந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இஸ்லாமிய, திராவிட இயக்கங்கள் அறிவித்ததால், நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப் பட்டது. இதனால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரத யாத்திரை வருவதையொட்டி செங்கோட்டையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.