
சென்னை வடபழனியில் நகைக்காக பெண் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, கோயில் குருக்கள் பாலகணேஷே தன் மனைவியைக் கொன்றது தெரிய வந்துள்ளது. அவரைக் கைது செய்த போலீசார், நகையை பதுக்க உதவிய அவரது நண்பரையும் கைது செய்தது.
திருடர்களால் கொள்ளை அடிக்கப் பட்டதாகக் கூறப்பட்ட 15 சவரன் தாலி, செயின் நகைகள், அந்தப் பெண்ணின் கணவர் பாலகணேஷிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர் போலீஸார்.
15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தது போலீஸார், குழந்தையின்மையைக் காரணம் கட்டி, மனைவி தன்னை அவமானப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறியதாக தகவல் கூறியுள்ளனர்.
முன்னதாக, சென்னை வடபழனியில் கோவில் குருக்கள் பாலகணேஷை கட்டிப் போட்டு அவரது மனைவியை கொலை செய்த மர்ம கும்பல், வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபு. இவர், சிவன் கோவில் குருக்களாக பணி செய்கிறார். இவரது மனைவி ஞானப்பிரியாவுடன் (24) வாடகை வீட்டில் வசித்து வந்தார் பிரபு. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் ஏப்.5 அன்று காலை 6 மணி அளவில் பிரபு வீட்டுக்கு வெளியில் உள்ள கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடந்ததை வீட்ட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே பார்த்த போது, கதவு பூட்டப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை தள்ளிக் கொண்டு பிரியா, பிரியா என அழைத்தபடியே வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி மேலும் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞானப்ரியா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். அவரை யாரோ அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்த தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அங்கே பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வடபழனி போலீசார் விரைந்து வந்தனர். உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் சந்த்ரு ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை அடுத்து கொலை செய்யப்பட்ட ஞானப்ரியாவின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பிரபு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கண் விழித்து என்ன நடந்தது என்பதைக் கூறினால் மட்டுமே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறிய போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
ப்ரியா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் காணாமல் போயிருந்தது. நள்ளிரவில் பிரபுவின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததாகவும், பிரியாவை கொலை செய்ய முயன்ற போது தடுக்க வந்த பிரபுவை கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பால கணேஷே தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு, நாடகம் ஆடியதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, நள்ளிரவில் உருட்டுக் கட்டையுடன் வந்த இருவர் தன்னை தாக்கி, வீட்டின் உள்ளே சென்று தனது மனைவியைக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறினார்.
இதை அடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, வெளி நபர்கள் யாரும் பாலகணேஷின் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. மேலும் பாலகணேஷ் கூறும் தகவல்கள், முரண்பாடாகத் தெரிந்ததால், அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாலகணேஷை போலீஸார் காவலில் வைத்து விசாரித்தனர். இதில், பாலகணேஷ், ஞானப்பிரியாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
சம்பவத்தின்போது மயக்க நிலையில் இருந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் மீது ரத்தத் துளிகள் இருப்பது தெரிய வந்தது. உடனே, அந்த ரத்தத் துளிகளை பாலகணேஷுக்கே தெரியாமல் எடுத்து, தடயவியல் துறைக்கு அனுப்பினோம்.
இதில் அந்த ரத்தமும், ஞானப்பிரியாவின் ரத்தமும் ஒன்று என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினோம். இதில் அவர் தன் மனைவியைக் கொன்றுவிட்டு, நகைகளை மறைக்க, தனது நண்பரான பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜை அழைத்து நகைகளைக் கொடுத்துவிட்டு, தன்னை தாக்கி சுய நினைவிழந்த நிலையில் கிடப்பது போல் வீட்டின் பின்பகுதியில் போடச் சொல்லி, அனுப்பியுள்ளார் என்று கூறின போலீஸார்.
இதையடுத்து, பாலகணேஷ், மனோஜ் ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



