சென்னை: தமிழகத்தில் காவிரிக்காக போராட்டங்கள் நடத்துவரும் நிலையில், முழு அடைப்புப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கர்நாடகத்தின் நிலையைக் காட்டுவதற்காக, கர்நாடக மாநிலம் முழுதும் வரும் 12ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இது குறித்து கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியபோது, வரும் 12ஆம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், பள்ளித் தேர்வுகள் நடைபெற உள்ளதால் வரும் 12ஆம் தேதி நடக்கவிருந்த கர்நாடக மாநில முழு அடைப்புப் போராட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முழு அடைப்புப் போராட்டத்தை ரத்து செய்வதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தாலும், மே 3ஆம் தேதி இது குறித்து மீண்டும் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியது, உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஒட்டித்தான் என்று கூறப்படுகிறது.
மே 3 ஆம் தேதி மத்திய அரசு திட்ட வரைவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், போராட்டத்தை ரத்து செய்வதாகவும், மே 3 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பின்னர் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்புவதாக தமிழகத்தில் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.
கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை ஊக்கப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் விசாரணையும் அமைந்துள்ளன. இந்த விசாரணை (09.04.2018) மேலும் கால நீட்டிப்பு வழங்கியதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதில்லை, “ஏதோவொரு செயல்திட்டம்” இந்திய அரசு அமைத்தால் போதும் என்று நேற்று (09.04.2018) கூறியதால் உற்சாகமடைந்த கர்நாடகத் தரப்பினர் 12.04.2018 அன்று நடத்தவிருந்த கர்நாடக முழு அடைப்பைக் கைவிட்டனர். உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஒளிவு மறைவின்றி கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் மோகன் காதர்க்கி 09.04.2018 அன்று கூறியுள்ளார்.
நீதிமன்றக் கட்டளையை செயல்படுத்த மறுத்த நடுவண் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது! மே மாதம் 3-க்குப் பிறகும் கர்நாடக அணைகளைத் திறந்து மூடும் அதிகாரம் படைத்த “ஒரு செயல் திட்டத்தை” இந்திய அரசு உருவாக்காது என்பது வெள்ளிடைமலை! – என்று கூறியுள்ளார்.