சென்னை: ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியதால், கோபமடைந்த பெண் நிருபர் பல முறை கன்னத்தைக் கழுவிக் கழுவித் துடைத்தாராம்.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவரைத் துளைத்து எடுத்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினாராம். அதற்கு நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிய ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினாராம்.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தியாளர் சந்திப்பு முடியும் தருவாயில் ஆளுநரிடம் நான் ஒரு கேள்வி எழுப்பினேன். ஆனால், என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு அதிகாரி என்ற தோரணையில் என் கன்னத்தில் தட்டி அமைதிப்படுத்தினார். என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடையா தாத்தா போன்ற வயதுடையவர் என கூறிக் கொண்டு கன்னத்தில் தட்டுவது அவருக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை அது தவறு” என்று பகிர்ந்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி தொலைபேசியில் கல்லூரி மாணவிகளுடன் தொலைபேசியில் பேசிய விவகாரத்தில் ஆளுநர் பெயரை போகிற போக்கில் அவர் பெயரைக் குறிப்பிடுவதால், ஆளுநருக்கு இதில் தொடர்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஒரு பெண் நிருபரும் அது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால் குற்றச் சாட்டுகளை மறுத்த ஆளுநர், செய்தியாளார் சந்திப்பை முடித்துவிட்டு எழுந்த நிலையில், மீண்டும் அந்தப் பெண் நிருபர் கேட்டபோது, நீங்கள் என் பேத்தி போல் என்று சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத் தட்டினாராம். இதைக் குறிப்பிட்டு தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட அந்தப் பெண் நிருபரால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையான நடத்தை அல்ல. என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தாலும் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உங்களுக்கு வேண்டுமானால் இது ஒரு தாத்தாவைப் போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரை அது தவறு” என்று அந்த நிருபர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் இதற்கு மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்!