இதயத்தில் உள்ளது காவிரி! மேலாண்மை வாரியம் விரைவில் அமையும்! : ஆளுநர் கொடுத்த நம்பிக்கை!

Published:

governor banwarilal purohit - 2026

சென்னை: ஆளுநர் மாளிகை தொடர்பில் ஊடகங்களில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து விளக்குவதற்காக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6 மணி அளவில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

அருப்புக்கோட்டை தனியார் கலைக் கல்லூரி பேராசிரியை கல்லூரி மாணவிகளை தவறான வழியில் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் அப் வழியே உலா வந்தது. இதை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப் பட்டு போலீஸ் விசாரணையும் நடைபெற்றது.

இந்த நிலையில் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவின் பேரில், இந்தப் புகார் குறித்த விசாரணை சிபிசிஐடி போலிஸார் வசம் ஒப்படைக்கப் பட்டது. முன்னதாக, பல்கலை., சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப் பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து அதே நேரத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் ஆளுநரை சந்தித்தார் மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை. இதன் பின்னர் பல்கலை., நியமித்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழு திரும்பப் பெறப் பட்டது.

முன்னதாக, ஆளுநர் மாளிகையிலேயே பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நேர்மையான மனிதர் என்று பெயரெடுத்தவர். அதனால், ஊழல்களைக் களைவதில் முன்னணியில் நின்று, பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் செய்து, முறைகேடுகள் குறித்து கேட்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று தமிழக கட்சிகளால் வர்ணிக்கப் படும் ஒரு பதவியின் அதிகாரங்களை வெளிகாட்டிய புரோஹித்தின் செயல் அரசியல்வாதிகள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகம் ஊழல்களின் உறைவிடம் என்றும் முறைகேடுகளின் புகலிடம் என்றும் பொதுமக்களிடம் பெயரெடுத்துள்ள நிலையில் ஆளுநரின் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் ஜீரணிக்க இயலாத அளவுக்கு இருப்பதாக பேசப் படுகிறது. இந்த நிலையில், கோவையில் பாரதியார் பல்கலையில் மிகப் பெரும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து பல்கலை.,களின் துணைவேந்தர்களை அழைத்து கூட்டங்களை நடத்தி, ஊழலுக்கு எதிரான சாட்டையைச் சொடுக்கினார் ஆளுநர்.

banwarilal purohit - 2026

இதனிடையே, ஆளுநர் மாளிகையில் பர்னிச்சர்கள் வாங்கியதில், போலி பில்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதைக் கண்டறிந்து ஆளுநர் மாளிகை ஊழியர்கள் இருவர் உள்பட பர்னிச்சர் விநியோகம் செய்பவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, முன்னாள் பகுதி நேர ஆளுநராக செயல்பட்ட வித்யாசாகர் ராவ் மீதம் விட்டுச் சென்ற விமான பயண பில் ஒன்றை மகாராஷ்டிரம் கட்டட்டும் என்று திருப்பி அனுப்பி, அவரது கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார் ஆளுநர் புரோஹித்.

இத்தகைய சூழலில் ஆளுநர் மீது ஏதாவது ஒரு குற்றத்தைச் சுமத்தி, அவரை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற பல்வேறு சதிவலைகளை ஆளுநர் மாளிகையில் இருப்போர் உள்பட அரசியல்வாதிகள் பின்னி வருகின்றனர். இந்த நிலையில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா, ஆளுநர் பெயரை இழுத்து மோசமான குற்றச்சாட்டை சுமத்துகின்ற வேலையில் இறங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் ஆளுநர் இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இன்று மாலை 6 மணி அளவில், கிண்டி ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பன்வாரி லால் புரோஹித். அப்போது நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Nirmala Devi audio Governor says accusation against him is - 2026

தொடர்ந்து வேறு பல கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆளுநர், ‘மாவட்டங்களில் நான் செய்வது ஆய்வு அல்ல. மாவட்டங்களில் உள்ள நிலைமை குறித்து அறிந்துகொள்ளவே அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறேன் என்றார்.

தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “காவிரி விவகாரம் என் இதயத்தில் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நான் மேலிடத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றேன். எப்போதெல்லாம் நான் தில்லி செல்கிறேனோ அப்போதெல்லாம் நான் காவிரி விவகாரம் குறித்து பேசுகிறேன். இன்று கூட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசினேன். அப்போது மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று பேரில் அதிக அனுபவம் வாய்ந்தவரை தேர்ந்தெடுத்தோம். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டத்தில் இந்த எல்லைக்குள் இருப்பவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்து எழுந்த ஆளுநர், தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசினார். ‘நான் தமிழை விரும்புகிறேன். ஆதலால் தமிழை கற்று வருகிறேன்’ என்றார். அண்மைக் காலமாக திருக்குறள் குறித்து அதிகம் கற்று வருகிறார். திருக்குறள் குறித்து வெளியான நூல்களைப் படித்தும் வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img