குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை துவங்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் 4 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியில் சீசன் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு தொடர்ந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. ஆண்டு தோறும் சீசன் காலத்தில் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் குற்றாலத்தில் சாரல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு சாரல் திருவிழா நாளை தொடங்குகிறது. குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் சாரல் விழா தொடக்க விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை தாங்குகிறார். எம்.பி.,கள் பிரபாகரன், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ., செல்வமோகன் தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வரவேற்றுப் பேசுகிறார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றி சாரல் திருவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசுகிறார்.
சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் அபூர்வவர்மா சிறப்புரையாற்றுகிறார். சுற்றுலா ஆணையர் பழனிகுமார் விளக்க உரையாற்றுகிறார்.
விழாவில் எம்.பி.,கள் விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், எம்.எல்.ஏ.,கள் முருகையா பாண்டியன், இன்பத்துரை, லெட்சுமணன், மைதீன்கான், முகமது அபுபக்கர், பூங்கோதை ஆலடி அருணா, வசந்தகுமார், மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன், தாட்கோ வங்கி மாநில துணைத் தலைவர் குற்றாலம் சேகர், மாநில கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் தச்சை கணேஷ் ராஜா, அக்ரோ தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, ரோஸ்மேரி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், இன்னிசை, கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் நன்றி கூறுகிறார்.
வரும் 29ம் தேதி காலை 8 மணிக்கு ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்க்கலை கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது. விழாவிற்கு அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை தாங்குகிறார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் வரவேற்று பேசுகிறார். அமைச்சாகள்; கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தோட்டக்கலை கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகின்றனர். எம்.பி.,கள், எம்.எல்.ஏ.,கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாமில் படகு போட்டியும், மாலை 3 மணிக்கு கலைவாணர் கலையரங்கில் யோகா போட்டியும், 31ம் தேதி காலை 10 மணிக்கு பராசக்தி மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி நடக்கிறது.
ஆக.1ம் தேதி காலை 10 மணிக்கு குற்றாலம் பேரூராட்சி நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும், மாலையில் பராசக்தி மகளிர் கல்லூரியில் வில்வித்தை போட்டியும், 2ம் தேதி பராசக்தி மகளிர் கல்லூரியில் கோலப்போட்டியும், கலைவாணர் கலையரங்கில் கொழு கொழு குழந்தைகள் போட்டியும், 3ம் தேதி ஆணழகன் போட்டியும், நிறைவு நாளான 4ம் தேதி மினி மாரத்தான் போட்டியும் நடைபெறுகிறது.



