ஜூன் முதல் வாரத்தில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்?

Published:

வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், 596 இன்ஜினியரிங் கல்லூரிகளில், கடந்த ஆண்டில்,  இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால், கவுன்சிலிங் முடிவில், 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் கூடுமா அல்லது குறையுமா என்பது, இம்மாத இறுதியில் தெரியவரும். ஏற்கனவே, மூன்று கல்லூரிகள் தங்கள் கல்லூரியை மூடுவதற்கான கடிதத்தை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் கொடுத்துள்ளன. இதற்கு இரண்டு அமைப்புகளும் அனுமதி அளித்து, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிக்காமல், படிப்படியாக புதிய மாணவர் சேர்க்கையை ரத்துசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், பல கல்லூரிகள் சில படிப்புகளை முடித்துக் கொள்ளவும், சில புதிய படிப்புகளை சேர்க்கவும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் அனுமதி கேட்டுள்ளன. இதற்கான ஆய்வுகள் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிகள் மற்றும் படிப்புகளுக்கான அனுமதியை, அண்ணா பல்கலையிடம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும். பின், கல்லூரிகளுக்கான இணைப்பு ஆணையை, இம்மாத இறுதியில், அண்ணா பல்கலை பிறப்பிக்கும். இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: மே முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரப் பட்டியல் வந்ததும், அந்தக் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் அனுமதி, மே இறுதி வாரத்திற்குள் வழங்கப்படும். அதன்பின், எந்தெந்த கல்லூரிகள் இந்த ஆண்டு செயல்படும், அவற்றிலுள்ள படிப்புகள் எவை என்ற விவரம் தெரியும். அதற்குள், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி, மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்படும். இதையடுத்து, இந்த ஆண்டு அதிகபட்ச, கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, கல்லூரிகளின் தர வரிசை நிர்ணயிக்கப்படும். ஜூன் இறுதி அல்லது ஜூலை 1ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img