வேலூர்: மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் மாணவர்கள் 10 பேர் சிறப்பு நேரத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, ஜவ்வாது மலை காவனூரில், எஸ்.எஸ்.எல்.ஸி.,க்கு தேர்வு எழுதச் சென்ற 20 மாணவ, மாணவியர் உட்பட 50 பயணிகளுடன் அரசு டவுன் பஸ் ஒன்று வாணியம்பாடி சென்றது. நேற்று காலை 7 மணிக்கு புறப்பட்டுச் சென்ற அந்த பஸ்சை ஆலங்காயத்தைச் சேர்ந்த மனோகரன் ஓட்டிச் சென்றார். ஜவ்வாது மலைப் பாதையில், ஆர்.எம்.எஸ். புதூர் வளைவில் காலை 8 மணிக்கு அந்த பஸ் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மலையில் இருந்து பள்ளத்தில் கவிழ இருந்தது. இதனால் சுதாரித்த ஓட்டுநர் மனோகரன் பஸ்ஸை மலைப்பாதை வளைவில் இருந்த மாமரத்தில் மோதி நிறுத்தினர். இதில், பஸ்சின் முன் பக்கம் கடுமையாக சேதமடைந்தது. விபத்தில் பஸ் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி மாணவியர் உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆலங்காயம் போலீஸார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்த, எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியர் 10 பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்குச் சென்றனர். அங்கு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு வாய் மொழியாக அறிவியல் தேர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் தேர்வு எழுதினர்.