ஒழுங்கா உண்மைய பேசுங்க… திருமாவளவனுக்கு பால் முகவர் சங்கம் ‘அட்வைஸ்’

Published:

thirumava - 2026

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உண்மையைப் பேச வேண்டும் என்று பால்முகவர்கள் சங்கம் அறிவுரை கூறியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவுனரும் மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய திரு. தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இந்த சாமானியனின் கடிதம். வணக்கம் தலித் ஆதரவு, இந்துத்துவா எதிர்ப்பு, ஈழத்தமிழர் பிரச்சினை என தங்களின் அரசியல் பயணம் சிறப்பான (?!) முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது அதற்கு முதலில் எங்களது நல் வாழ்த்துகள்.

தாங்கள் கடந்த 20.10.2018 அன்று “நியூஸ் 7 தமிழ்” தொலைக்காட்சியில் “வியூகம்” எனும் விவாத நிகழ்ச்சியில் “சபரிமலை விவகாரம் காங்கிரஸ் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது” எனும் தலைப்பில் நிகழ்ச்சி நெறியாளர் திரு. விஜயன் அவர்களோடு கலந்துரையாடிய நிகழ்ச்சி தான் இந்த கடிதத்தை நாங்கள் எழுத காரணமாக அமைந்தது.

அந்நிகழ்ச்சியை பற்றி நண்பர் ஒருவர் சொன்ன போது நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்கள் என அவரிடம் ஒரு குட்டி சண்டையே போட்டு விட்டேன். ஏனெனில் சட்டம் பயின்று மெத்தப்படித்தவரான தாங்கள் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பற்றி பேசியிருக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை இருந்தது.

அந்நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கும் சூழல் அமையவில்லை என்றாலும் நண்பரால் வலையொளி தளத்தில் (YouTube) இன்று காணும் வாய்ப்பு கிட்டியது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

நிகழ்ச்சி தொடங்கி சரியாக 5நிமிடம் 22வது வினாடியில் நிகழ்ச்சி நெறியாளர் திரு. விஜயன் அவர்கள் “சமத்துவம் என்கிற இடத்தில் நீங்களே பார்த்திருப்பீர்கள் எத்தனை ஆயிரம் பெண்கள் சாலையில் வந்து சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என போராடினார்கள்” என கேள்வி கேட்கும் போதே அவரை இடைமறித்து “பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் “Hindu Code Bill” சட்டம் கொண்டு வந்தார்.

“Hindu Code Bill” சட்டத்தில் பெண்ணுரிமை பற்றிய விசயங்களே அதிகமாக இருந்தது. அதில் பிறந்த வீட்டில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும், ஆண்களுக்கு எப்படி சொத்திலே பங்குண்டோ அது போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு தர வேண்டும். என்கிற சொத்துரிமை கருத்துக்கள் அடங்கிய அந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் அந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் அப்போதிருந்த இந்துத்துவா தலைவர்களான பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோர் பெண்களை திரட்டி பாராளுமன்றத்திற்கு வெளியே கடுமையாக போராடினர். அதனால் அந்த சட்டம் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றப்படாமல் போனது. அதனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என பேசியுள்ளீர்கள்.

நீங்கள் பேசியதில் பல விசயங்களை முன்னுக்குப்பின் முரணாகவும், உண்மைக்குப் புறம்பான தகவலையும் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் “Hindu Code Bill” அந்த சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு 1948என நினைக்கிறேன். அப்போது போராட்டங்கள் நடைபெற்றதும், அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததும் உண்மை தான்.

ஆனால் அந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் கடுமையாக எதிர்த்த இந்துத்துவா தலைவர்கள் என நீங்கள் சொல்லும் கோபாலகிருஷ்ண கோகலே அவர்கள் 1915ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதியும், பாலகங்காதர திலகர் அவர்கள் 1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியும் அதாவது நமது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே மறைந்து விட்டனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அதாவது 1947க்கு முன்னரே இறந்து போன சுதந்திரப் போராட்டத் தியாகிகளான பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் இந்தியா சுதந்திரம் அடைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அறிமுகம் செய்த “Hindu Code Bill” ஐ பெண்களை திரட்டி பாராளுமன்றத்திற்கு வெளியே போராடினார்கள் என பேசியிருப்பது மூலம் நீங்கள் திராவிடக் கட்சிகளின் இந்து மத எதிர்ப்பை இறுகப் பற்றியிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மேலும் நீங்கள் சொல்கின்ற அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அறிமுகம் செய்த “Hindu Code Bill” சட்டத்தை அப்போது கடுமையாக எதிர்த்தவர்களில் காங்கிரஸாருக்கும் குறிப்பாக முன்னாள் பிரதமர் நேரு அவர்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

இந்து சமய மக்களின் வாக்குகள் மட்டும் தவறாமல் வேண்டும் என எதிர்பார்க்கும் உங்களைப் போன்ற சமூக போராளிகளும் தொடர்ந்து இந்து மதத்தை தூற்றி வருவோர் பட்டியலில் இணைந்திருப்பது வேதனையளிக்கிறது.

இந்து மத எதிர்ப்பாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோர் பெண்களை திரட்டி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அறிமுகம் செய்த சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே கடுமையாக போராடினர் என நீங்கள் எதையாவது பேச வேண்டும் என்கிற நோக்கில் பேசியதை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நெறியாளரும், ஆசிரியர் குழுவும் எப்படி கண்டு கொள்ளாமல் விட்டது பொதுமக்களை முட்டாளாக்கும் செயலாகவே தோன்றுகிறது.

இனி வருங்காலங்களில் பிற அரசியல்வாதிகள் போலில்லாமல் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் வெறும் மேம்போக்காக பேசாமல் உண்மையை, நேர்மையாக பேச அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img