சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள இந்த பங்க்கில் நேற்று இரவு பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர்(38) என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களது பைக்குக்கு 800 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
பின்னர் சிவசங்கரிடம் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் திடீரென சிவசங்கரின் கையிலிருந்த பணப்பையை பறித்துள்ளார். சிவசங்கர் பணப்பையை கொடுக்காமல் பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் திடீரென அரிவாளால் சிவசங்கரன் தலையில் சரமாரியாக வெட்டினார். இதனால் அவர் ரத்தக் காயங்களுடன் சுருண்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் பணப் பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டது. இதையடுத்து படுகாயமடைந்த சிவசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் பங்கில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் மற்றும் சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற பையில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே பாணியில் சிதம்பரம் புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் சென்னை வில்விவாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (43) என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால் தலையில் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது. இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.