சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 103 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை எட்டு வழி சாலையாக 1937 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…
சேலம் மாவட்டம் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடி பகுதியில் 90 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டிய அவர், சேலம் மாவட்டத்தில் மேலும் ஐந்து இடங்களில் 45 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாநகர பகுதியில் பஸ்போர்ட் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானநிலையங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் இந்த பஸ்போர்ட்டில் அமைக்கப்படும் என்று கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிராமம் கிராமமாக செல்வதாக அறிவித்து இருப்பது குறித்து பேசிய முதலமைச்சர் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது கிராமங்களுக்கு செல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் தேர்தல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் கிராமங்களுக்கு சென்று வருவதாக விமர்சித்தார்.
கிராம மக்களை எந்த ஒரு அரசியல்வாதியும் ஏமாற்ற முடியாது என்று கூறிய முதலமைச்சர் அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கியதற்கு காரணமே கிராம மக்களை முன்னேற்றுவதற்கு தான் என்றார்.
அவரது வழியில் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இலவச மிக்சி கிரைண்டர் மின்விசிறிகளை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கிராமங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உரிய நேரத்தில் திருமணம் செய்து கொள்ள வசதியாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையை வழங்கினார்
தமிழகம் முழுவதும் 37 லட்சம் மடிக்கணினிகள் அரசின் சார்பில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் உயர் கல்வியில் ஏழை எளிய குடும்பங்கள் பங்கேற்பது அதிகப்படுத்த பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்திய அளவில் முதல் முறையாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் பெரிய அளவிலான பிரமாண்ட கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் விவசாயிகளின் உபதொழில் ஆன கால்நடை வளர்ப்பினை மேம்படுத்தும் வகையில் இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் செயல்படும் என்றார்.
சேலத்தில் இருந்து செங்கப்பள்ளி வரையிலான 103 கிலோமீட்டர் தூரத்திலான தேசிய நெடுஞ்சாலை 1937 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலையில் இருந்து எட்டு வழி சாலையாக அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மக்களின் துணையுடன் தவிடுபொடியாக்குவோம் என்றார்.
விழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.