சென்னை லயோலா கல்லூரியில் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி, இந்துக் கடவுளர்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவதுறு பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந் நிகழ்ச்சி குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில், லயோலா கல்லூரி நிர்வாகத்தின் போக்கும் குறித்தும், தமிழக அரசின் மெத்தனம் குறித்தும் கருத்து கூறிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், மாநில அரசும் இதற்கு உடந்தையாக இருக்கிறது என்ற சந்தேகமே ஏற்படும் என்று கூறினார்.
லயோலா கல்லூரி விழாவில் நடந்த அவதூறு நிகழ்ச்சிகள் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இந்த விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் தலைமை செயலரிடம் டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கிறேன். கல்லூரியில்தான் இந்த நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன என்பதால் கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த அவதூறு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசும் உடந்தை என்று தான் கருத வேண்டி இருக்கும் என்று கூறினார்.