ஸ்டாலின்… அரசியல் பேசுனாங்க… கூடவே உடல்நலம் பத்தியும் விசாரிச்சாங்க..! போட்டுடைத்த பிரேமலதா!

Published:

vijayakanth premalatha - 2026

விஜயகாந்தை ஸ்டாலினை சந்தித்த போது உடல்நலம் குறித்து மட்டுமல்ல அரசியலும் பேசப்பட்டது என்கிறார் பிரேமலதா விஜய்காந்த்!

தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்று ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில், விஜயகாந்த்தை சந்தித்துவிட்டு, அரசியல் பேசவில்லை, வெறுமனே நலம் விசாரிக்கவே வந்தேன் என்று திமுக., தலைவர் ஸ்டாலின் சொன்னாலும், அரசியல் பேரம் பேசவே வந்தார் என்று அடித்துச் சொன்னார்கள் தமிழர்கள்.

காரணம், முந்தைய நாளில் அதே போன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசரிடம் இதே போன்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது தேர்தல் காலம், அரசியல் பேசாமல் இருக்க முடியுமா என்று கேட்டார்.

அவரிடம் இருக்கும் எள்ளளவு உண்மைத் தன்மை கூட ஸ்டாலினிடம் கடுகளவுகூட இல்லாமல் போனது, அவரது இரட்டை வேடத்தையும் பதவி வெறியையும் காட்டுகிறது.

காரணம், திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டும் விசாரிக்கவில்லை அரசியலும் பேசினார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பொதுவில் போட்டு உண்மையை உடைத்ததுதான்!

Premalatha Vijayakanth - 2026

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி நிலவும் வேளையில், அது செல்வது திமுக., கூட்டணிக்கா அல்லது அதிமுக கூட்டணிக்கா என்ற விவாதம் பரவலாக எழுந்துள்ளது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப் படவில்லை. எதற்காக அவ்வளவு சீக்கிரமாக கூட்டணியை முடிவு செய்ய வேண்டும், கடைசி வரை இழுத்தடித்து பேரம் பேசலாமே என்ற எண்ணம் விஜயகாந்த்துக்கு இருந்தால், அதனால் பாதிக்கப் படப் போவது, அதிமுக., கூட்டணி அல்ல, மாறாக திமுக., காங்கிரஸ் கூட்டணியே!

அதனாலேயே இவ்வளவுக்கு திமுக தரப்பு முனைப்பு காட்டுகிறது.

விஜயகாந்த் உறுதிபட தெரிவிக்கவில்லை என்றால், கூட்டணியில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளும், மதிமுக., வைகோவும் ஏகத்துக்கும் டென்ஷனாக வேண்டியிருக்கும். கூட்டணியில் நாம் இருக்கிறோமா அல்லது கழற்றி விடப் போகிறார்களா என்பதே தெரியாமல் இருவரும் காலம் தள்ள வேண்டியிருக்க்கும். தேமுதிக., திமுக.,வின் கூட்டணிக்கு வரவில்லை என்ற முடிவு தெரிந்தால் மட்டுமே, இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் தேமுதிக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நேரத்தைப் போக்கும் விதத்தில் கூறியுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரிடம் வெகு நேரம் உரையாடினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது. கூட்டணி குறித்து பேசவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசினேன் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Vijayakanth STalin - 2026

ஆனால், கருணாநிதி உயிரிழந்த நேரத்தில், அமெரிக்காவில் இருந்து நேராக கருணாநிதி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் அடுதத இடத்துக்குப் போனார் விஜயகாந்த். அந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்த விஜயகாந்த், அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பி வந்திருக்கும் நேரத்தில், அன்றோ அல்லது மறுநாளோ சென்று ஸ்டாலின் சந்தித்திருந்தால், அரசியல் பேசவில்லை, உடல் நலம் குறித்து விசாரித்தேன் என்று அவர் கூறுவதை ஏற்றுக் கொண்டிருக்க இயலும்.

ஆனால், பாஜக.,வின் சார்பில் பியூஷ் கோயல் கூட்டணிப் பேச்சு நடத்தினார். அதிமுக.,விடம் விஜயகாந்த்துக்காக சில பரிந்துரைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சு இழுத்துக் கொண்டிருந்தது. முடிவு எட்டப் படாமல் போன நிலையில், சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்க, பேரம் பேசும் வேலையில் இறங்கிய ஸ்டாலின் முதலில் திருநாவுக்கரசை தூது விட்டார். பின்னர் மறு நாள் காலை ரஜினி வந்து சந்தித்தார் என்று அறிந்ததும், இம்முறை தாமே நேரில் சென்றார்…

இப்படி ஒரு சூழலில் உடல் நலம் விசாரிக்க வந்தேன் என்ற பொய்யை எவரும் நம்பத் தயாராக இல்லை.

அதற்கு ஏற்றது போல், இன்று பிரேமலதா தனது பேட்டியில், தலைவர் விஜயகாந்தை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர் பெற்ற சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் ஸ்டாலின் உடல்நிலை குறித்து மட்டும் கேட்கவில்லை. எங்களிடம் அரசியல் குறித்தும் பேசினார். அரசியல் குறித்து நீண்ட நேரம் விவாதம் செய்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

vijayakanth piyush goyal - 2026

இதன்முலம் விஜயகாந்துடன் ஸ்டாலின் கூட்டணி குறித்துதான் பேசினார் என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், ஸ்டாலின் சொன்னதற்கு மாறாக ஒரு விதத்தில் ஸ்டாலினை காட்டிக் கொடுக்கும் விதத்தில் பிரேமலதா பேசி இருப்பது, திமுகவிற்கும் தேமுதிகவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டிருக்கிறதோ என்ற எண்ணத்தையும் எழுப்பி உள்ளது.

அது போல், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும், எங்க அப்பாவை ஏன் இவ்வளவு பேர் பார்க்க வர்றாங்க தெரியுமா என்று கேட்டு உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார். எனவே, பேரம் பேசுவது மட்டுமே விஜயகாந்தை சந்திக்க வருபவர்கள் மேற்கொள்வது என்ற உண்மையை தாயும் மகனும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img