பொள்ளாச்சி இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட்டு கொண்டிருக்கிறது. பொள்ளாச்சியில் மது போதையில் 150 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் மிகப் பெரிதாக வெடித்துள்ளது.
தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள அண்ணா நகர் தொகுதி தோட்ட தனியார் சொகுசு விடுதியில் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா, மது, போதை மாத்திரை சாப்பிட்டு நேற்று இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விதவிதமான போதை வஸ்துகள் கைப்பற்ற பட்ட பொள்ளாச்சி சொகுசு விடுதியால் மிரண்டு போனார் எஸ்.பி. அப்படி என்ன விவகாரம்.. ?
பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் கணேஷ் என்பவரது தோட்டத்தில் `அக்ரி நெஸ்ட்’ என்ற சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது.
அங்கே அப்படி ஒரு சொகுசு விடுதி இருக்கிறது என்பதே சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இருந்துள்ளது.
ஆன்-லைன் புக்கிங் மூலம் அந்த சொகுசு விடுதியைக் கண்டடைந்து ஏராளமான இளம் வயதினர் குத்தாட்டம், கும்மாளம் போடுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டுவிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், இதுகுறித்து ஆனைமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஆனைமலை போலீஸார், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்த போதை நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் உடனடியாக கோவை எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் அளித்தனர்.
எஸ்.பி உடனடியாக தனது தலைமையில் ஒரு குழுவை அழைத்துக் கொண்டு இரவே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு ரகளை செய்து கொண்டிருந் திருக்கிறார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை எஸ்.பி.சுஜித்குமார் “ஒரு பெண் உட்பட மொத்தம் 163 இளைஞர்கள். அவர்களில் 120-க்கும் மேற்பட்டவர்கள் கேரள இளைஞர்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானோர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்று கொண்டிருப்பவர்கள்.
அவர்களுக்கு எப்படி இவ்வளவு போதை வஸ்துகள் கிடைத்தது என்பதுதான் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். அந்த சொகுசு விடுதியின் உரிமையாளரையும் கைது செய்திருக்கிறோம்.
எப்படி இவர்களுக்கு போதை வஸ்துகள் கிடைத்தன, இவர்கள் எவ்வளவு நாள்களாக இங்கு வருகிறார்கள்,
இதன் பின்னணியில் வேறு ஏதாவது குற்றங்கள் நடக்கிறதா? என்கிற கோணத்திலெல்லாம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.