மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? அல்லது ஆரிய மாதா சிலையா? என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று வெளிட்ட அறிக்கையில் (செவ்வாய்) மறைந்த முதல்வா் ஜெயலலிதா 2013 மே 14 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் ‘சங்கம் அமைத்துத் தமழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் அன்னை சிலை ஒன்று நிறுவப்படும். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போல தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும், கட்டிடக் கலை நாகரிகப் பெருமைகளையும் உலகத்திற்கு பறைசாற்றும்படி தமழ் அன்னை சிலை அமையும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
ஜெயலலிதாவின் அறிவிப்பை ஆறு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு முன் வந்துள்ளது. தமிழக அரசின் பும்புகார் நிறுவனம் தமிழ் அன்னை சிலை வடிப்பதற்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
. இந்த அறிக்கை குறித்து பாரம்பரிய விஸ்வகா்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள வேண்டுகோள் மடல் மூலம் தமிழ் அன்னை சிலை உருவாக்கம் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் அன்னை சிலை எப்படி வடித்தெடுக்ப்பட இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு பும்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருக்கின்றது.
‘தமிழ்அன்னை வடிவம் கற்சிலையில் கூடாது. பளிங்குக் கல், பைப்பர், கண்ணாடி இழை ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இத்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும்
வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும், சங்க கால முறையையும் பின்பற்றி சிலை வடித்தெடுக்கப்பட வேண்டும் என்று பும்புகார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் ஊடுருவி உள்ள சில நச்சுக் கிருமிகள் தமிழா்களின் கலை இலக்கியம், பண்பாடு அனைத்தையும் இந்துத்துவா மயமாக்க முயற்சித்து வருகின்றன.
உலகமே வியக்கும் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றவா்கள் தமிழா்கள் திராவிடர்களின் கட்டிடக் கலை மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரையில் பரவிய கீா்த்திமிக்க வரலாற்றுச் “சிறப்புக்கு உரியது.
ராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலும் அவரது மகன் ராஜேந்திரன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழா்களின் புகழை பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.
மாமல்லபுரத்தில் பல்லவா்கள் வடித்த கற்கோயிலும், சிலைகளும் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதவை ஆகும்.
ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் என்று ஆய கலைகள் அறுபதிலும் சிறப்புற்று விளங்கிய தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவுகூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளனா்.
ஆனால் தமிழக பும்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிலை வடித்தெடுக்கும் பணியை ஒப்படைத்து பளிங்கு கல், பைப்பர கண்ணாடி இழையைக் கொண்டு வேதகால பிராமணிய இந்து கலாச்சார முறைப்படி தமழ் அன்னை சிலையை உருவாக்குவோம் என்று திட்டமிடுவது கடும் கண்டனத்திற்குரியதாகும்
சங்ககால மரபையும் வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும்?
தமிழா்கனின் பண்பாடும், வேதகால இந்து பிராமணிய மரபும் ஒருபோதும் இணைக்கவோ பிணைக்கவோ முடியாதது என்கிற வரலாற்று அறிவை இவர்கள் எப்படி இழந்தார்கள்?
சனாதன சங்கபரிவார கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி அரசை கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சீரழிக்க நினைக்கிறது. அதனால்தான் தமிழ் அன்னை சிலைக்கு பதிலாக ‘ஆரியமாதா’ சிலை வடித்து சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள்.
மத்திய பாஜக அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்று கூறினால் முதல்வா் பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது.
திராவிட இயக்கம் தழைத்த இந்த மண்ணில் தமிழா் மரபுகளை, பண்பாடு விழுமியங்களை விழுங்கத் துடிக்கும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒருபோதம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழா்களின் கலை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளை க் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என வைகோ வலியுறித்தி உள்ளார்.




