தரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
தமிழ் மண்ணின் பெருமையைப் பறை சாற்றும், தமிழர்களின் மதிப்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து தரம் தாழ்ந்தும் கேவலமாகவும் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நடந்த கூட்டம் ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய போது, தமிழகத்தில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான். அதற்கு முக்கிய காரணம் நிலங்கள். அதன் அடிப்படையில் பல பிரச்சனைகள் நடந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான் இருண்டகாலம்.
சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். சாதியம் தலை தூக்கியதும் அப்போதுதான்! மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம் என்றெல்லாம் மிக மோசமாகவும் தரம் தாழ்ந்தும், தமிழர்களின் பெருமையை சிதைக்கும் விதமாகவும் பேசினார்.
பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சை கண்டித்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். நெல்லையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப் பட்டது.
இந்நிலையில் ராஜராஜ சோழன் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாதி, இனம், மொழி மூலம் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


