முதலமைச்சரின் டுவிட்டர் பதிவை திரித்து செய்தி வெளியிட்டதாக தினகரன் செய்தித்தாள் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தி கட்டாயம் என்ற மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் இருமொழி கொள்கையே அரசின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 5 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், மற்ற மாநிலங்களில் தமிழ்மொழியை விருப்பப் பாடமாக கொண்டுவர வேண்டும் என்றும் இது உலகத்தின் மிகப் பழமையான மொழிக்கு சேவையாக கருதப்படும் என்றும் பதிவு செய்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் டுவிட்டர் பதிவு குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ், இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு, தலைவர்கள் கடும் எதிர்ப்பு என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது.
ஆனால், இந்தச் செய்தி உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்துடன் வெளியிடப் பட்டது என்று கூறி தினகரன் நாளிதழ் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் மீது சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.