சென்னையில் கடைசியாக மழை பெய்து இன்றோடு 191 நாட்கள் ஆகிவிட்டன. சென்னைவாசிகளின் பிரார்த்தனை ஒருவேளை நிறைவேறாமல் போனால் இது 200 நாளைக் கூட தொட்டுவிடும்.
ஆனால் அப்படி நடக்காது என்று நம்பிக்கை கொடுக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
அதாவது சென்னை மழையை சந்தித்து 191 நாட்கள் ஆகிவிட்டதாகவும், ஆனால் இது 200 நாட்களை தொடுவதற்கு முன்பு அதாவது ஜூன் 20ம் தேதிக்குப் பிறகு சென்னை மழையை நேருக்கு நேர் சந்திக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
24 மணி நேரத்தில் 22 மணி நேரமும் மேற்குப் பகுதியில் இருந்து வரும் வறண்ட காற்றின் காரணமாகவே சென்னையில் கடும் வெப்பம் நிலவுகிறது.
கடற்கரையில் இருந்து வீசும் பலவீனமான காற்று காரணமாக வெப்பச்சலனமும் ஏற்படாததால் தான் சென்னையில் ஒருசொட்டு மழையும் பெய்யவில்லை.
மேற்கில் இருந்து வடமேற்கு நோக்கி வறண்ட காற்று வீசுவதால் தென்மேற்குப் பருவ மழையும் சற்று பலவீனமடைந்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாகவே கடந்த ஒரு சில நாட்களாக மழையின் அளவு குறைந்துள்ளது.
இந்த நிலைமை ஜூன் மாதம் 21ம் தேதிக்குப் பிறகு சற்று மாறும். அதன் பிறகு வெப்பநிலையும் குறைவதை நாம் பார்க்கலாம்.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மாலை 5.30 மணியளவில் 41 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
மே மாதத்தை விடவும் இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் சென்னையின் மிக கோரமான மாதமாக அமைந்துள்ளது.
மரங்கள் மழையைக் கொண்டு வராது. ஆனால், இன்றைய நாளைப் போல மிக மோசமான வெப்பத்தைக் கொடுக்காமல், வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
அதே சமயம், ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்யும் மழையினால், குடிநீர் பிரச்னை நிச்சயம் தீராது.
எனவே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். தென்மேற்கு பருவ மழையால் நிலத்தடி நீர் மட்டமும் உயர வாய்ப்பில்லை.
ஜூன் 21ம் தேதிக்குப் பிறகு தென்மேற்குப் பருவ மழை தீவிரம் எடுத்து அதன் மூலம் கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது…
~ என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.