நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டிவி செய்தியாளர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்து, ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்தத் தாக்குதல் பின்னணியில் போலீஸ் இன்ஸ்பெக்டரே இருப்பதாக பரபர தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது!
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான பாலியல் புகார் குறித்து செய்தி வெளியிட்ட்டார் பாலிமர் டிவி., நியூஸ் செய்தியாளர்! அவர் மீது கூலிப்படையை ஏவி விட்டு, அரிவாள் வெட்டு நடந்ததாக நேற்றிரவு முதலே அதிர்ச்சி தரத்தக்க வகையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து செய்தியாளர் ஒருவர் தனது பேஸ்புக்கிலும் பரபரப்பாக ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாலிமர் நியூஸ் டிவி.,யின் செய்தியாளராக பணிபுரிந்து வரும் முத்துவேல், தட்டார்மடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் கணினியில் செய்தி டைப் செய்து கொண்டிருந்த போது, அரிவாளுடன் புகுந்த ரவுடி சண்முகநாதன் உள்ளிட்ட கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.
“இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கு எதிரா செய்தி போடுவியாலே…” என்று முத்துவேலை மிரட்டிய படி, ரவுடி சண்முகநாதன் அரிவாளால் வெட்டியுள்ளார். தலை, வயிறு, மார்பு, கை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த முத்துவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டுள்ளனர்.
இதை அடுத்து, பலத்த காயத்துடன் போராடிக் கொண்டிருந்த முத்துவேலு உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு, அங்கெ முதலுதவி அளிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வரும் முத்துவேலு, தன்னை கொலை செய்ய கூலிப் படையை ஏவியவர், காவல் ஆய்வாளர் கஜேந்திரன் என்று வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் விவகாரம் என கூறப்படுவதாவது…
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்தவர் கஜேந்திரன்! இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரை பாலிமர் நியூஸ் செய்தியாளர் முத்துவேல் செய்தியாக வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து கந்துவட்டி வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் உருட்டல் மிரட்டலில் ஈடுபட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்தார் என்றும் ஒரு செய்தி வெளியானது.
இத்தகைய செய்திகளால் கடுப்பான காவல் ஆய்வாளர், முத்துவேலை ஏதாவது வழியில் சிக்க வைக்க நேரம் பார்த்திருந்துள்ளார். பழிக்கு பழிவாங்க தீபாவளி நேரத்தில், அரசு அனுமதித்த 2 மணி நேர கால அளவை விட கூடுதல் நேரம் பட்டாசு வெடித்துள்ளார் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்து, செய்தியாளர் முத்துவேலை கைது செய்ய முயன்றுள்ளார் காவல் ஆய்வாளர் கஜேந்திரன்!
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிடப் பட்டதால், அப்போது கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தட்டார்மடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் மணல் கடத்தல், பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியானது. இதனால் மேலும் கடுப்பான காவல் ஆய்வாளர் கஜேந்திரன், தன்மீது வன்மத்துடன் இருந்ததாகக் கூறியுள்ளார் செய்தியாளர் முத்துவேல்.
கடந்த திங்கட்கிழமை அன்று, வழக்கறிஞர் ஒருவரை காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தாக்கியது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனை முத்துவேல் மட்டும் செய்திக்காகப் படம் பிடித்தாராம். இதனால் கஜேந்திரம் ஆத்திரம் அடைந்ததாக முத்துவேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தனது இடமாற்றத்துக்குக் காரணம் முத்துவேல் என்று கருதிய கஜேந்திரன், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி தன் மீது கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக தான் அளித்த புகாரில் கூறியுள்ளார் செய்தியாளர் முத்துவேல்.
இதை அடுத்து, இந்தத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம், இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளையும், ரவுடிகளை ஏவிய காவல் ஆய்வாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.