தே.மு.தி.க. கட்சி பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த்துக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய செலவுகள் காரணமாக அவர் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட்ரோடு கிளையில் அவர் கடன் வாங்கினார். மதுராந்தகம் தாலுக்காவில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை வங்கியில் அடகு வைத்து அவர் கடன் பெற்றார்.வாங்கிய கடனை திரும்பி செலுத்தாததால் விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டது. அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரேமலதா கூறியதாவது:-20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கல்லூரியின் மேம்பாட்டுக்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தோம். அந்தக் கடனில் சுமார் 5 கோடி அளவு திருப்பிச் செலுத்தவேண்டியிருந்தது, அதை செலுத்த நேரம் கேட்டபோது வங்கி அதை மறுத்துவிட்டது. அதன் காரணமாகவே வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது. எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது, சட்டப்பூர்வமாக இந்த பிரச்னையை சந்தித்து மீண்டு வருவோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம். கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். நேர்மையானவ்சர்களுக்கு சோதனைகள் வரும், ஆனால் கடவுள் கைவிடமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.



