சென்னை: தனது மனைவியைக் கொன்றவர்களைப் பழிதீர்க்கும் விதமாக, 4 கொலைகளைச் செய்த தொழிலதிபர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறிக்க முயன்ற கூட்டாளியால் அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமச்சந்திரன்(55). இவர் மகன் பிரகாஷ்(27) கடந்த 11 ஆம் தேதி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் தன் தந்தையைக் காணவில்லை என புகார் அளித்தார். அவரது புகாரி பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். திடீரென ஏப்.13ஆம் தேதி தனது தந்தை ராமச்சந்திரனை யாரோ கடத்தியுள்ளதாக போலீஸில் மீண்டும் பிரகாஷ் புகார் அளித்தார். இதை அடுத்து காணாமல் போனவர் குறித்த வழக்கு கடத்தல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, ராமச்சந்திரனை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், ராமச்சந்திரனின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் கொடுங்கையூர் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கே சென்று ராமச்சந்திரனை மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன் நண்பர் தியாகராஜன்(56) என்பவருடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான அன்புஞானத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியின் கொலைக்கு பழிக்குப் பழியாக 4 கொலைகளைச் செய்ததாகவும், அதற்கு தான் உதவியதாகவும், தற்போது கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டதால் அன்புஞானத்துரையை மிரட்டி பணம் பறிக்கவே இந்த நாடகம் ஆடியதாகவும் அவர் போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தொழிலதிபர் அன்புஞானத்துரையின் நெருங்கிய நண்பர் ராமச்சந்திரன். 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த அன்புஞானத்துரையின் மனைவி ஜான்சிராணி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் அப்போது கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் நடத்திய விசாரணையில், தொழில் போட்டி காரணமாக அன்புஞானத்துரையின் மனைவி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கில் இருந்து 1996ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார் மாரியப்பன். இதை அறிந்து, தனது மனைவி கொலைக்கு பழி தீர்க்க எண்ணிய அன்பு ஞானத்துரை, ராமச்சந்திரனின் துணையுடன் மாரியப்பனை வெட்டிக் கொன்று, உடலை கூடுவாஞ்சேரி பகுதியில் புதைத்துவிட்டார். ஜான்சிராணியைக் கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்த முத்து என்பவரை 1998ஆம் ஆண்டு கொலை செய்தார். மாரியப்பன் சிறையில் இருந்தபோது, ஏற்கெனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராமச்சந்திரனின் மற்றொரு நண்பரான முருகன் என்பவரிடம், அன்புஞானத்துரையின் மனைவியை தான் கொலை செய்யவில்லை என்றும், அவருடைய தம்பிதான் கூலிப்படை வைத்து கொலை செய்தார் என்றும் மாரியப்பன் கூறியிருந்தார். மாரியப்பன் கொலை செய்யப்பட்டதும் முருகன் சிறையில் இருந்தபடியே அன்புஞானத்துரையை மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்நிலையில், 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த முருகனையும் அன்புஞானத்துரை கொலை செய்தார். பின்னர் 2002ஆம் ஆண்டு அன்புஞானத்துரையின் தம்பி பால்அன்பழகன் சென்ற கார் மீது லாரியை மோதி கொலை செய்துவிட்டு, விபத்தில் அவர் இறந்ததாக நாடகம் ஆடினார். இந்தத் தகவல்கள் அனைத்தும் ராமச்சந்திரனை விசாரித்ததில் தெரியவந்தது. இதையடுத்து 4 கொலைகள் செய்ததாக தொழிலதிபர் அன்புஞானத்துரையை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உதவியதாக ராமச்சந்திரனையும் கைது செய்தனர். இந்தக் கொலை வழக்குகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆண்டுகளாக நடந்த 4 கொலை வழக்குகளில் சிக்காமல் இருந்து வந்த தொழிலதிபர், மிரட்டி பணம் பறிக்க முயன்ற முன்னாள் கூட்டாளியின் கடத்தல் நாடகத்தால் வசமாக சிக்கிக் கொண்டார்.
மனைவி கொலைக்கு பழி தீர்க்க 4 கொலைகள்: 20 ஆண்டுக்குப் பின் தொழிலதிபர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari