திருக்குற்றாலம் பேரருவியில் ஓரளவு தண்ணீர் விழுந்தது. கடந்த சில நாட்களாக மழை பெரிதாக இல்லை. லேசான தூறலும் சாரலுமாக இருந்ததால், அருவிக்குப் பெரிய அளவில் நீர் வரத்து இல்லை. எனவே மிதமான அளவிலேயே தண்ணீர் விழுந்தது.
ஆனால், சனி, ஞாயிறு இரு நாட்களும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பிரதான அருவியின் வாகன நிறுத்தம் இடம் வரைக்கும் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர். பலர், வரிசையில் நிற்க பொறுமை இன்றி குளிக்காமல் சென்றனர். பின்னர் செங்கோட்டையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஆரியங்காவுக்கு அருகில் உள்ள பாலருவிக்கு குளிப்பதற்காக சென்றனர். பாலருவியில் ஒருவருக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால் அங்கே பெண்கள் பாதுகாப்பாக குளிக்க இயலாது என்பதால் அவர்கள் அருவித் தடாகத்தில் குளித்து மகிழ்ந்தனர்.
அதே போல் அச்சன்கோவில் செல்லும் வழியில் உள்ள மணலாறு அருவியில் குளிப்பதற்காக பெருமளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று வந்தனர்.
குற்றாலம் பேரருவியை அடுத்து, மிகவும் பாதுகாப்பாக குளிப்பதற்கு என பெண்களுக்கும் ஆண்களுக்குமாக கருதப் படுவது சிற்றருவி. நேற்று சிற்றருவி குளிப்பதற்காக பொதுமக்களுக்கு திறந்துவிடப் பட்டது. ஒரு டிக்கெட் ரூ. 6 என வசூலிக்கப் பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர். இன்றும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
குற்றாலத்தில் மட்டுமே பெண்கள் 24 மணி நேரமும், நள்ளிரவில் கூட பாதுகாப்பாக அருவியில் குளித்து மகிழ முடியும். எனவே நேற்று இரவிலேயே பெண்களும் அதிக அளவில் பேரருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குற்றாலம் வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.