கனமழை கொட்டி தீர்ப்பதால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப் பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கன மழை காரணத்தால், கோவை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.
உதகை மாவட்டத்திலும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து 5 வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கூடலூர் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர குடிசைகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை பெய்து வருவதால் மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார்கள் அடிப்படையில், உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு மண்டல அலுவலகத்தை 0422 – 2243133 எண்ணிலும்
தெற்கு மண்டலத்தை 0422 – 2252482 என்ற எண்ணிலும்,
கிழக்கு மண்டலத்தை 0422-2572696 மற்றும் 2577056 எண்களிலும்
மேற்கு மண்டலத்தை 0422 – 2551700,
மத்திய மண்டலத்தை 0422 – 2215618 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக எண்களான 0422 -2390261, 62 மற்றும் 63 எண்களை தொடர்பு கொண்டும் மக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், 81900-00200 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 74404 – 22422 என்ற கைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம்.


