“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”
“கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்-பெரியவா

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி,இரண்டு பையன்கள்,ஒரு பெண். மகா சுவாமிகளிடம் அபார பக்தி.
பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை,குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஒரிரு நாள்கள் தங்கி, பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.
“இந்தப் பையனுக்கு ஒன்பது வயசாயிடுத்து. உபநயனம் நடத்தணும்” என்று பெரியவாளிடம்விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.
“செய்யேன்…”-பெரியவா
“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”
பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.
“உன்னோட பையன்தானே?”
“இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டுவிட்டுத் தாயாரும் போய்ச்சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்? நாங்கள் குழந்தையை எடுத்துண்டு வந்தோம். ஊர்,பெயர், பந்து ஜனங்கள் தெரியலை.திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி…”
பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.
அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம்,
“பாரு..ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து, வளர்த்து,பூணல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு.”
கண்ணன் சொன்னார்; “அவரோட சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருக்கோம்.
பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக்கொண்டு சொன்னார்கள்;
பூணூல் போடு. ஆனா குழந்தையை அந்நியமா நினைச்ச்டாதே. உன் பையன்தான்.”


