ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்று, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை
கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மாண்புமிகு அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கை களை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப் படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது.
தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து
சேவை இயக்கப்படாது.
தமிழ்நாடு அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.