![ஹைஜாக் செய்யப்பட்ட பள்ளிச் சீருடை! ஹிஜாப் அரசியலில் சிக்கிக் கொண்ட அரசுப் பள்ளி! 1 IMG 20220303 WA0018](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/IMG-20220303-WA0018.jpg)
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த பிப். மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரும் எடுத்து இருந்தது. அங்கு பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியப் பள்ளி, கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது, இது தொடர்பான வழக்கு அங்கு இப்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஆசிரியை லட்சுமி என்பவர் +2 மாணவிகள் சிலரை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவித்த மாணவியின் பெற்றோர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்று உறுதி அளித்தார். அதன் பின்னரே பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை சுதா கூறுகையில் , நான் இன்றுதான் செவ்வாய்க்கிழமை இந்த பள்ளியில் புதியதாக தலைமை ஆசிரியையாக சேர்ந்துள்ளேன்.
இங்கு நடந்த பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தெரியாது ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். தற்போது பள்ளிக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
- திருவண்ணாமலை பாலா