
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் அவசரக்கூட்டம், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சொத்துவரி உயர்வு குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சியிலும் சொத்துவரி உயர்வு குறித்து அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சொத்துவரி உயர்த்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர் கரைமுருகன் வாயிலும், கண்ணிலும் கருப்பு துணியை கட்டிவந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
சொத்துவரிகளை உயர்த்தக்கூடாது என்று கூறி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள், பாஜக கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கரைமுருகன், சாந்தி மற்றும் பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி, சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, சிவகாசி மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




