
ஆடி அமாவாசைத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு நடத்தினர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பக்தர்கள் விரதமிருந்து பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கோயிலில் வழிபட அனுமதியளித்ததையடுத்து நிகழாண்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை கன்னியாகுமரி கோவை சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்திருந்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஜூலை 26 முதல் பக்தர்கள் வனப்பகுதியில் பல்லாயிரம் பக்தர்கள் குடில் அமைத்து தங்கியிருந்து விரதமிருந்து இசக்கிஅம்மனுக்கு பொங்கலிட்டும் பட்டவராயருக்கு ஆடு பலியிட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.வியாழக்கிழமை இரவு பட்டவராயர் சன்னதி முன்பு விரதமிருந்த பக்தர்கள் தீக்குழி இறங்கினர்.
பக்தர்கள் வந்த கார், வேன், தனியார் பேருந்து உள்ளிட்டவை அகஸ்தியர் பட்டியில் நிறுத்தப்பட்டன. அகஸ்தியர் பட்டியிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காரையாறுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.





